Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 16 - சு. சமுத்திரம்
இரவு வந்தது. வேலைக்குச் சென்ற எல்லோருமே வந்து விட்டார்கள்.
வெளியே உள்ள களத்தில் பாய்விரித்து, உட்கார்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். மல்லிகா, சந்திரா, ராக்கம்மா முதலியவர்கள் இன்னொரு பக்கத்தில் கும்பலாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாளும் இருந்தார்.
“என்ன நாய்க்கரே... எத்தனை நாளைக்கு... இந்த சைக்கிள் ரிக்ஷாவ வச்சிக்கிட்டு அவஸ்தப்படப் போகிறீர்? பேசாம ஒரு ஆட்டோ ரிக்ஷா வாங்கப்படாதா?”
“ரிக்ஷா மேல இருக்க ‘டாப்பையே’ மாற்ற முடியல. ஆட்டோவுக்கு எங்க போறது? ‘கேக்கேன்னு நீங்க தப்பா நினைக்கப்படாது... உம்ம கூட மெட்ராசுக்கு வந்தவங்கெல்லாம் இன்னைக்கு வீடு வாங்கிட்டான். நீர் இன்னும் அந்த கந்தல் கோணி வியாபாரத்துலேயே கீறது நாயமா... குதிரையைக் குறையும்.”
“குறைக்கிறதாவது, அடியோட விட்டுட்டேன். அப்படியும் கட்டல. பேசாம நம்ம செட்டியார் மாதுரி... துணி வாங்கி ஏலத்துல போட்டு விக்கலாமான்னு பார்க்கிறேன்” என்றார் பெருமாள்.
அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக பேச்சு நடந்தது. தேர்தல், அரசியல்வாதிகள், சினிமா, எதையும் விடவில்லை.
‘வீட்டுக்காரம்மா’ மாடியில் இருந்து பார்த்தாள். வசதியே இல்லாத இந்த அசதிகாரர்களால், எப்படி சிரிக்க முடிகிறது? எப்படி ஒற்றுமையாக இருக்க முடிகிறது? அவள் வயிறு எரிந்தது. அப்போது, சில சின்னப் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இட்லி’ ஆயா, தன் நொள்ளைக் கண்ணுக்கு மருந்து போடப் போனாள். மல்லிகா, தோழிகளுக்கு ஒரு கைக் குட்டையை வைத்து, அதில் எப்படிப் பூ போடுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று விளக்குகள் அணைந்தன. வீட்டுக்காரி, மாடியில் இருக்கும் ‘மெயின் ஸ்விச்சை’ ‘ஆப்’ செய்தாள். அனைவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள். ஏதோ பேசப் போன ராக்கம்மா கூட, வம்பு வேண்டாம் என்பது போல், பேசாமல் இருந்தாள். வயிற்றில் எரிந்ததை, விளக்கை அணைத்து, வீட்டுக்காரி ஆற்றிக் கொண்டாள். அப்படியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால், அவள் வயிறு, மீண்டும் எண்ணெய் இல்லாத திரி போல் எரிந்தது. அவள் உள்ளே போனாள். தகர டப்பா மச்சான் வெளியே வந்தார்.
“தூங்குங்களேய்யா... இப்படிப் பேசினால் எப்படி? நானு தூங்க வேண்டாமா...”
எதிர்ப்புக் குரல் கொடுக்காமலே, எல்லோரும் தூங்காமலே படுத்தார்கள். இருக்கிற பிரச்சினைகள் ஏராளம். இவன் பிரச்சினை வேறா? வேண்டாம். வீட்டைக் காலி பண்ணச்