தம்பி, அடிபடுவது வரைக்கும் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, பிறகு, அவன் விடுபட்ட பிறகு, வீட்டுக்காரி கத்தினாள்.
“எப்படியோ ஜோடிச்சி இல்லாததையும் பொல்லாததையும் பேசி, என் தம்பிய அடிச்சிட்டீங்க. அவன் கையை இவள் பிடித்தாளா... இவள் கையை அவன் பிடித்தானான்னு தெரியாமலே அடிச்சிட்டிங்க இல்ல? ஓரடிக்கு ஒன்பது அடி கொடுக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்ல...”
கந்தசாமிக்குப் போன கோபம் மீண்டும் வந்தது.
“பேசாம போ... மே... பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். அந்த கம்மனாட்டிய அடக்கத் தெரியல... பேசுறாள் பேச்சு...”
“ஏய்... என்னையாடா... மேன்னு சொல்ற. நான் எருமை மாடாடா. இந்த மல்லிகா... அவனைக் கண்ணடிக்கிறது உனக்குத் தெரியுமா...”
“இந்தா பாரும்மா, யாரை வேணுமுன்னாலும் பேசு. மல்லிகாவைப் பேசுன... வாய்... வெத்திலை பாக்கு போட்டுக்கும். பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். நீ டா போட்டதக்கூட பொறுத்துக்கினேன்... மல்லியப் பேசுனே... நாறிப் போயிடுவே...”
வீட்டுக்காரி, கீழே கிடந்த தம்பியைத் தூக்கிக் கொண்டே, மாடிக்குப் போய், அங்கிருந்து பேசினாள். ‘அம்மா’ ‘அம்மா’ என்று சொல்லும் ஒருவன், ‘மே’ என்று சொல்லிவிட்ட திகைப்பிலேயே சிறிது நேரம் தடுமாறி விட்டு, தாறுமாறாகப் பேசினாள்.
“என் தம்பிய கைவச்சுட்டல்ல? பாரு வேடிக்கையை... டேய்... ரமணா... இன்ஸ்பெக்டர் அண்ணனுக்கு போன் பண்ணுடா. வக்கீல் அண்ணாவுக்கு டெலிபோன் செய்டா. பெரியப்பா மகனுக்கு தெரியப்படுத்துடா... ரெண்டுல ஒண்ணப் பார்த்துப்புடலாம். பழிக்குப் பழி வாங்காம விடப் போறதுல்ல...”
ரமணன் வெளியே ஓடினான்.
பத்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ வந்து அலறியது.
இருவரும், ஆட்டோவில் ஏறினார்கள். கந்தசாமி அலட்சியமாக இருந்தான். அவன் மனைவி அழப்போனாள்.
“அய்யோ... போலீஸ் வந்து உன்னைக் கூட்டிக்கினு போனால் நான் என்ன பண்ணுவேன். ஜாமீனுக்குக் கூட ஆளுங்க இல்லியே. போலீஸ்காரன் உதைப்பானே. உனக்கு வேற ஜுரமாச்சே. பூட்ஸ் காலால மிதிப்பானே.”
“சும்மா இரும்மே... போலீஸ்னா கொம்பா...”
மல்லிகா, கந்தசாமியையே பார்த்தாள். போலீஸ்ஆரர்கள் உதைத்தாலும் பரவாயில்லை