சொல்லுவான். அப்புறம், வீடு தேடி, தெருத் தெருவாச் சுத்தணும். அவன் வீட்ல ரேடியோ பாடும் போதே நம்மை பேசக் கூடாதுன்னு சொல்றான். ஒழிஞ்சி போறவன்.
அனைவரும் தூங்கி விட்டார்கள். அப்படியே தூங்கிப் போனார்கள். ஆனால், ‘வீட்டுக்காரி’யால் தூங்க முடியவில்லை. இவர்களுக்கு நாம் யாரென்று காட்டணும்! ஒருத்தியையாவது தொலைத்துக் கட்டணும். மல்லிகா சிக்கினால்... நல்லது.
இரண்டு நாட்களில், ரமணன் வந்து விட்டான். அவனைக் காணாமல் கண்ணீர் விட்டு, கலங்கிக் கொண்டிருக்கும் மல்லிகாவை நிம்மதியில் ஆழ்த்துவது போல் வந்து விட்டான். அதே சமயம், தான் எழுதிய கடிதத்தை, அவள் யாரிடமாவது காட்டி, நிலைமை எக்கச்சக்கமாக ஆகியிருக்குமோ என்று உள்ளூர உதறலுடன் வந்தான். எல்லோரும் அவனை உதாசீனம் செய்ததில் அவனுக்குச் சந்தோசம். மல்லிகா சொல்லவில்லை. ஏன் மல்லிகா சொல்லவில்லை? இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும். எப்படியாவது...
மத்தியான வேளை. ‘ஹார்பார்’ கந்தசாமி வேலைக்குப் போகவில்லை. அங்கே வேலை நிறுத்தமாம். படுத்துக் கிடந்தான்.
மல்லிகா, அவன் மனைவிக்கும், இதர பெண்களுக்கும், சிலேட்டில், ‘க,ங,ச’ வை எழுதிக் காட்டிவிட்டு, பிறகு ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். இட்லி ஆயாவும் “பலமா படி குயந்தே... ஆயா காதுல நுழையல...” என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்காரி பார்த்தாள். பாடத்தைக் கேட்டாள் அவளும். மல்லிகாவைப் போல், ‘பாடம்’ புகட்ட நினைத்தாள். திடீரென்று ரேடியோவைப் போட்டாள். பலமாக அதைக் கத்த விட்டாள். அவள் படிப்பது கேட்காதபடி உச்ச நிலையில் வைத்தாள். எல்லாப் பெண்களும், முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர, அவளை முறைக்கவில்லை.
மல்லிகா, சலிப்போடு எழுந்தாள். எழுந்தவள், நடை வாசல் பக்கமாகப் போனாள். எதிரே, ரமணன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் போய்விட்டாள். இளித்துக் கொண்டே வந்த ரமணன், அவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. எப்படி நடந்து கொண்டானோ புரியவில்லை. திடீரென்று மல்லிகா கத்தினாள்.
“முட்டாள்! என்னைப் பற்றி என்னடா நினைத்தாய்? எருமை மாடு... செருப்பு பிஞ்சிடும்... ராஸ்கல்...”
எல்லாப் பெண்களும், அங்கே ஓடினார்கள். ரமணன் எந்தப் பக்கமும் ஓட முடியாமல், ஒளியவும் முடியாமல், எதிர்பார்த்த இனிமை, எருக்கம்பால் போல் அரிக்க, அவன் திணறிக்