கிளிப்பிள்ளையைப் பார்த்து, சிரித்தார்கள். பிறகு, அவரை அனுதாபத்தோடு பார்த்தார்கள். பிறகு, ‘ஆம்புளைக்கு’ மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அது ‘தெரியாம கேக்குற’ ஆம்புளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மேலும் நினைத்து, பயந்து விட்டவர்கள் போல், தலைகளை கட்டாயப்படுத்திக் கீழே போட்டுக் கொண்டார்கள். தகர டப்பா, தேர்தலில் வெற்றி பெற்று விட்டவர் போல், மனைவியிடம் ‘டிபன்’ மன்றாடாமல் கிடைக்கும் என்று நினைத்து, அந்த வேகத்திலேயே மாடிக்குப் போய்விட்டார். ‘குடித்தனப்’ பெண்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இதற்குள் மல்லிகாவின் அம்மா செல்லம்மா வந்துவிட்டாள். நடந்த விவரத்தைக் கேள்விப்பட்டதும், இந்தப் பெண்களிடம், “அய்யோ ஆம்புளைங்களுக்கு தெரிய வேண்டாம். அப்புறம் எங்க வீட்டுக்காரரை கட்டுப்படுத்த முடியாது. என் மகன் பரமசிவம், ஒரே ஆட்டமாய் ஆடுவான்... விஷயம் நம்மோடயே இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டு ‘முறைவாசல்’ செய்யப் போனாள். வீட்டுக்காரி மாடியில் இருந்தே கத்தினாள்.
“செல்லம்மா உன் பொண்ணை அடக்கி வை. செட்டு சேர்த்துட்டு கலாட்டா பண்றாள்... இந்தப் பருப்பு இங்கே வேகாது... ஜாக்கிரதை.”
செல்லம்மா அவளைப் பாராமல், அவள் பேசுவது வரைக்கும் துடைப்பத்தையே பார்த்தாள். பிறகு, செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.
--------------
தொடரும்