மல்லிகா, இட்லி ஆயாவை, நைலக்ஸ் புடவையோடு போய் நின்று, அணைத்துக் கொண்டாள். ஆயா, அங்கே வந்து சொக்கலிங்கத்திடம், “இந்தப் பிள்ளையாண்டான் தான் சொக்கலிங்கமா... பெரியபாளையாத்தாகிட்டே... ஒரு வாட்டி போயிட்டு வா நாய்னா... உனக்கு ஒண்ணும் வராது” என்றாள்.
பிறகு, மல்லிகாவின் காதோடு காதாக “நீ நல்லா இருப்பே குயந்தே... நீ... இங்கேயே இருக்கணுமுன்னு சொல்லத் தோணினாக்கூட... சொல்ல விரும்பல குயந்தே... ஏன்னா... நீ இருக்க வேண்டிய இடம் அதுதான் குயந்தே... ஆனால் அடிக்கடி வந்து, முகத்த காட்டிட்டுப் போ குயந்தே... எங்களை மறந்துடாதே குயந்தே... நீ மறக்க மாட்டே குயந்தே...”
‘இட்லி’ ஆயா, தன் பொட்டல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன் மடியில் கொண்டு வந்திருந்த ஒரு இட்லியை எடுத்து, மல்லிகாவின் வாயில் ஊட்டினாள். மல்லிகா, ஆயாவையே பார்த்தாள். கடந்த நாற்பது வருடமாய், பாசத்தைப் பார்த்திருக்க மாட்டாளோ...
பெருமாள் சத்தம் போட்டார்.
“ராகு காலம் வரப் போவுது. சீக்கிரம்... மல்லி... இன்னுமா பேசி முடிக்கலே. வண்டில ஏறும்மா...”
காரில், சொக்கலிங்கம் ஏறிக் கொண்டார். பார்வதியும் ஏறிக் கொண்டாள். மல்லிகா போவதற்காக கார் கதவைப் பிடித்துக் கொண்டே, டிரைவர் நின்றார்.
காருக்குள் போகப் போன மல்லிகா, ‘இட்லி’ ஆயாவைப் பார்த்தாள். கந்தசாமியின் மனைவியைப் பார்த்தாள். ‘பீடி சுத்தும்’ காமாட்சியைப் பார்த்தாள், சைக்கிள் ரிக்ஷாக்காரர் மனைவி மாரியம்மாளைப் பார்த்தாள். அங்கே இல்லாத ராக்கம்மாவைப் பார்த்தாள். இவர்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது... இவர்களை செல்வத்தில் தான் என்னால் புரள வைக்க முடியல... அவர்கள் வறுமையில் வாடும் போது, துணையாகவாவது நிற்கணும்... வீட்டுக்காரி மீண்டும் இட்லி ஆயாவை இம்சை செய்யப் பார்க்காள்னு மாரியம்மாள் சொன்னாள். இந்த ராக்கம்மா வேற கஷ்டத்துல இருக்காள்... இவர்கள் கொடுமைப்படுத்தப்