படாமல் இருக்கணுமுன்னா, இவர்களை கொடுமைப்படுத்த முயன்றாலும் முடியாதுன்னு ஒரு எண்ணம் வரணும்... அந்த எண்ணத்தின் சின்னமாக... நான் இவர்களோடயே இருக்கணும்... பிறகு, ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் போல், காரில் ஏறாமலே, குடித்தனப் பெண்களைப் பார்த்தாள். “அப்பா! நான் இவர்களோடேயே இருந்து விடுகிறேன்.”
சொக்கலிங்கம் பதறினார்.
“என்னம்மா சொல்றே... என்னம்மா சொல்றே?”
“கவலைப்படாதிங்க அப்பா... நான் இனிமேல் உங்கள் பெண் தான். அடுத்த ஜென்மமுன்னு இருந்து, நினைக்கிறது நிறைவேறும் என்றால் நான் உங்கள் பெண் தான். இங்கே... நான் இருக்க வேண்டிய கட்டாயம். இதனால... அங்கே வராமல் போகமாட்டேன். காலையில், இங்கேன்னால், சாயங்காலம் அங்கே. ஒரு நாளைக்கு தியாகராயநகர், இன்னொரு நாளைக்கு வண்ணாரப் பேட்டை... பரமசிவம்... கார்ல ஏறுடா...”
பார்வதி, கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.
“என்னம்மா இது... இன்னுமா யோசிக்கிற... நான் பழைய பார்வதி இல்ல... அதோட உன்னை வளர்த்தவடி. மடியில் போட்டுத் தாலாட்டியவள்... தோளில் தூக்கிக் கொஞ்சுனவள்... இதை விட... நீயே... என்னைக் கொன்னுடுடி...”
“சத்தியமாய்... சொல்றேன், நீங்கள் தான் என்னோட அம்மா... நீங்கள் சம்மதிக்காத எந்த விஷயத்திலேயும் ஈடுபட மாட்டேன். அது கல்யாணமாய் இருந்தாலுஞ் சரி...” என்றாள் மல்லிகா.
சொக்கலிங்கம் மல்லிகாவின் முகத்தைப் பார்த்த போது, அவள், அவரிடம் “இந்தாங்கப்பா... சொத்துல எனக்கு உரிமை கிடையாதுன்னு... நான் எழுதியிருக்கிற பத்திரம்...” என்று சொல்லி, சரவணன் கொடுத்திருந்த காகிதத்தை நீட்டினாள்.
சொக்கலிங்கம், அதைப் பிரித்துப் படிக்கப் போன போது பார்வதி, அதைப் பிடுங்கி,