சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு, “உன் மனசில் என்னடி நெனச்சிக் கிட்டே... பல்லு உடைஞ்சிடும்” என்றாள் அழுது கொண்டே...
மல்லிகா மன்றாடினாள்.
“என்னை மன்னிச்சிடுங்க அம்மா... நான் செய்தது முட்டாள் தனந்தான். எனக்கு உங்கள் மேலதான் ஆசையே தவிர... மற்றதுல ஆசையில்லை என்கிறதை காட்டுவதற்காக எழுதினேன். தப்புன்னா மன்னிச்சிடுங்கள். இல்லன்னா, உங்கள் மகளை நல்லா அடியுங்கள்... இந்தாங்க கன்னம்...”
மல்லிகா, முதுகைக் குனிந்து, முகத்தைக் காட்டிய போது, பார்வதி அதில் முத்தமிட்டாள். மல்லிகா, சமரசம் செய்தாள்.
“சரிம்மா, நீங்கள் இப்போ புறப்படுங்கள். நான் காலையில் அங்கே வந்துட்டு... சாயங்காலம் இங்கே வந்துடுறேன்...”
கார் புறப்பட்டது. செல்லம்மா ஏறிக் கொண்டாள். பெருமாள், “தங்கசாலை வரைக்கு வாரேன். பள்ளிப்பட்டுல கோணி கிடக்குது” என்று சொல்லிக் கொண்டே முன்னிருக்கையில் ஒட்டிக் கொண்டார்.
கார் போய்விட்டது.
மல்லிகா, ‘இட்லி’ ஆயாவை தன் பக்கமாய் சேர்த்துப் பிடித்துக் கொண்டே, இதர குடித்தன்ப் பெண்களுடன் சேர்ந்து இணைந்து, பிணைந்து நடந்தாள்.
--------------- (முற்றும்) -------------