Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 05 - சரோஜா ராமமூர்த்தி
1.5. அழைப்பு ........!
எண்ணங்களும், சிந்தனைகளும் முடிவில்லாமல் ஏற்படும் போது நாம் நம்மையே மறந்து விடுகிறோம். பவானி இவ்விதம்தான் தன்னையே மறந்த நிலையில் நின்றிருந்தாள். மனதுக்கு வேகம் அதிகம் என்று சொல்வார்கள். நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்துச் சுழன்று ஓடும் காட்டாற்றைவிட எண்ணங்களுக்கு வேகம் அதிகம். வாயு வேகத்தை விட மனோவேகம் வலிமை வாய்ந்தது. பவானி ஒரு கண காலத்தில் கடந்துபோன நாட்களை நினைவு படுத்திக் கொண்டு, அவை எழுப்பும் எண்ணச் சுழலில் சிக்கித் தவித்தாள். வில்லைப் போல் வளைந்து நெற்றிக்கே ஒரு சோபையைத் தரும் புருவங்களைச் சுளித்து அவள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அழகிய நீண்ட அவள் கண்கள் எங்கோ சூன்யத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
நாகராஜன் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அமைதியான குரலில், ”பவானி! இனிமேல் நீ என்ன செய்யப் போகிறாய் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது என் கடமை அல்லவா? உன்னைப் பல முறைகள் கேட்டும் நீ பேசாமல் நிற்கிறாயே!" என்றான்.
பவானியின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
”அண்ணா ! உன்னுடன் என்னை வரும்படிக் கூப்பிடுகிறாய். அவ்வளவு தானே? என்றைக்கும் ஒருவருடைய ஆதரவின் கீழ்தான் நான் வாழவேண்டும். இவை எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் அண்ணா ....." என்று சொல்லி முடிக்காமல் தேம்பிக் கண்ணீர் வடித்தாள்.
தமையன் வாஞ்சையுடன் அவள் அருகில் வந்து நின்றான். ஆதுரத்துடன் அவள் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.
"அசடே! என் வீட்டில் உனக்குச் சாப்பிடச் சாதம் இல்லாமலா போய்விட்டது? எதையோ நினைத்துக் கொண்டு வருந்துகிறாயே. பேசாமல் குழந்தையை அழைத்துக் கொண்டு என்னோடு புறப்படு அம்மா" என்று அழைத்தான்.
கூடத்திலே கோமதி உட்கார்ந்திருந்தாள். கொல்லையில் அண்ணனுக்கும் தங்கைக்கும்