விட்டுப் போன இடத்துக்குத் திரும்ப வந்து சேர்ந்தாள்.
"இதுவரை சேர்த்துக் கொண்டதில்லை. ஏனெனில் எந்தப் பெண்ணூம் சேர முன்வர வில்லை."
"க்ளப்பின் விதிமுறைகளில் அதற்கு இடையூறு ஏதுமில்லையே?"
"இடையூறாக இருந்தால் விதிமுறைகளை மாற்றி விடுகிறோம்."
"என்ன அவ்வளவு சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள்? மற்றவர்கள் சம்மதிக்க வேண்டாமா?"
"பவானிக்காக யாரும் எதையும் செய்வார்கள்!"
"இப்படிப் பேசினால் எனக்குக் கவலை அதிகரிக்கிறது."
"என்ன கவலை?"
"இத்தனை மதிப்பு என் மீது இந்த ஊர்க்காரர்கள் வைப்பதென்றால் அதற்குத் தகுதியுள்ளவளாக நான் விளங்க வேண்டுமே என்றுதான்."
"உங்கள் தகுதிக்கு என்ன குறைச்சல்? பி.ஏ.பி.எல். படித்திருக்கிறீர்கள். கோர்ட்டில் எல்லோரும் பிரமிக்கும்படி வாதாடுகிறீர்கள். சகஜமாக எல்லாருடனும் பழகுகிறீர்கள். அதேசமயம் கண்ணியத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொள்கிறீர்கள். இவ்வளவும் போதாதென்று பார்ப்பதற்கும் அழகா யிருக்கிறீர்கள்!"
பவானி தன் முகம் சிவக்காமல் இருக்க ரொம்பவும் பிரயாசைப்பட்டுத் தோற்றுப் போனாள். "இப்படிப் புகழ ஆரம்பித்தால் சகஜமாகப் பழக வேண்டாம் என்றே தோன்றிவிடும். இந்தக் கிளப்பில் சேர்வது பற்றியும் புனராலோசனை செய்ய வேண்டியதுதான்."
"புகழ்ச்சி பிடிக்காத ஒரு நபரை என் வாழ்க்கையில் இப்போதுதான் நான் முதல் தடவையாகப் பார்க்கிறேன். அது உங்கள் மதிப்பை மேலும் உயர்த்துகிறது" என்று கூறிய மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் 'லெமனே'டைத் தட்டிலிருந்து எடுத்து பவானியின் கரத்தில் கொடுத்தார். பிறகு,