"மெளனத்தில் மர்மம் இருக்கலாம். ஆனால் என்னைப்பற்றி ஒரு மர்மமும் இல்லை. நான் கல்கத்தாவிலிருந்து வந்தேன். இங்கே என் தாய்மாமனுடன் தங்கியிருக்கிறேன். அவர் ரிடையரானவர். மாமி காலமாகி இரண்டு வருஷங்களாகின்றன. சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டு காலம் தள்ளுகிறார். என் தகப்பனார் பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரி. என்னையும் என் தாயாரையும் யுத்தத்தை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து இங்கே அனுப்பிவிடத் தீர்மானித்தார். ஆனால் என் தாயார் அவரை விட்டு வரப் பிடிவாதமாக மறுத்து விட்டாள். என்னை மட்டும் இருவரும் சேர்ந்து வற்புறுத்தி ரயிலேற்றி விட்டார்கள்."
இந்தச் சமயத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. பக்க வாத்தியங்களின் ஓசையும் எழுந்தது. பவானி புருவங்களை உயர்த்தி, "ஏக அமர்க்களமாய் இருக்கிறதே?" என்றாள். "ஆமாம், இந்தக் கல்யாணம் வந்து சேர்ந்ததிலிருந்து ஒரே பாட்டும் கூத்தும் தான். ஏதோ நாடகம் நடத்தப் போகிறார்களாம்; பண வசூல் செய்து ஏழைகளுக்கு உதவப் போகிறார்களாம். பேசாமல் பிரிட்ஜோ டென்னிஸோ ஆடி விட்டுப் போகாமல் இதெல்லாம் என்ன வேண்டிக் கிடக்கிறது?" "சமூக சேவா சங்கம் என்ற பெயருக்கு ஏற்பக் கல்யாணம் ஏதாவது செய்ய நினைத்திருப்பார். நியாயம் தானே?" என்ற பவானி, "உண்மையில் நான்கூட அவரைத் தேடிக் கொண்டுதான் இங்கு வந்தேன். உங்களைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்ததில் வந்த காரியமே மறந்து விட்டது. இதோ ஒரு நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்று கூறி வீட்டுக் கட்டிடத்தை நோக்கி நடந்தாள்.
கோவர்த்தனன் அவள் போவதை முகம் சிணுங்கப் பார்த்தாலும் அந்த நடையழகை ரசித்துக் கொண்டுமிருந்தார்.
தொடரும்...