காத்திருக்கிறான். சீக்கிரம் அவர்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தாலும் நடக்கும் என்று ஊரிலே பேசிக் கொள்கிறார்கள்...."
"பார்த்தீர்களா! நான் சொன்னது சரியாய்ப் போயிற்று!" என்று காமாட்சி அம்மாள் தன் புருஷனிடம் சொன்னாள்.
"நாளைக்கு சர்ச்சில் ஜெயிக்கட்டும்; ஜப்பானும் ஜெர்மனியும் தோற்கட்டும். அல்லது பிரளயம் வந்து உலகமே அழிந்து போகட்டும். அப்போதும் நீ, 'பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாப் போயிறாறா?' என்பாய். நீ சொல்லாத விஷயமே கிடையாது. அது சரியாகப் போகாத நிலைமையும் இல்லை" என்றார் மாசிலாமணி. பிறகு ரங்கநாத முதலியாரை நோக்கி, "உங்கள் யோசனை தான் என்ன?" என்று கேட்டார்.
"வேறு நல்ல வரனாகப் பார்த்துக் கமலாவுக்குக் கல்யாணம் பண்ணிவிட வேண்டியதுதான்."
"நீங்களே பார்த்து இந்தப் பெண்ணுக்கு ஒரு வழி காட்டி விடுங்களேன். உங்களுக்கு புண்ணியமா யிருக்கும்" என்றாள் காமாட்சி.
"அதற்கென்ன பண்ணி விட்டால் போகிறது. நாளைக்கே நல்ல நாள்தான். ராகுகாலம் கழித்து நம் வீட்டுக்கு வாருங்கள். சாவகாசமாகப் பேசலாம்" என்று சொல்லி விட்டு ரங்கநாத முதலியார் சென்றார்.
அவர் போனதும் மாசிலாமணி தம் மனைவியைப் பார்த்து, "அடியே இனிமேல் அந்தக் கல்யாணம் இந்த வீட்டிலே கால் வைச்சால்...." என்று கறுவினார்.
"இந்தாங்க, உங்களால் நிறைவேற்ற முடியாத சபதம் எதையும் பண்ணாதீர்கள்! கல்யாணத்தின் காலை முறிக்க உங்களால் ஆகாது. வேணுமானால் இந்த நாற்காலியின் காலை முறிச்சு அடுப்பில் வைக்கிறதா சபதம் எடுத்துக்குங்க. நாற்காலி வீட்டின் சொந்தக் காரருடையதுதான். நம்முடையதில்லே!"
ரங்கநாத முதலியாருக்கும் தன் பெற்றோருக்கும் இடையில் நடந்த உரையாடலை யெல்லாம் உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கமலா, முதலில் திடுக்கிட்டாள். பிறகு