Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 25 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 25 -- விசித்திர வரவேற்பு
சமூக சேவா சங்கத்தின் டென்னிஸ் கோர்ட்டில் பவானியும் மாஜிஸ்திரேட் கோவர்த்தனனும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணம் அப்போது அங்கே வந்து, "மணி ஐந்தரையாகப் போகிறதே! ஒத்திகைக்கு நேரமாகிறதே!" என்றான்.
"ஒத்திகையை யெல்லாம் நீங்கள் நடத்துங்கள். பவானி அப்புறம் வருவாள்" என்றார் கோவர்த்தனன்.
"நோ, நோ! பவானி ரொம்ப பங்ச்சுவல். ஐந்தரை மணிக்கு ஒத்திகையென்றால் டாண்ணென்று அத்தனை மணிக்கு வந்துவிடுவாள்" என்றான் கல்யாணம்.
"வாட் நான்ஸென்ஸ்! இவளுக்கு எதற்கு ஒத்திகை? நடிக்கத் தெரியாதவர்கள்தாம் திரும்பத் திரும்ப ஒத்திகை பார்த்துக்கொள்ள வேண்டும். நாடகம் என்று அரங்கேறுகிறது என்று நேரம், தேதி சொல்லிவிட்டுப் போ. பவானி பங்ச்சுவலாக வந்து சேர்வாள்!"
"நீங்க கொடுக்கிற சர்ட்டிஃபிகேட்டைக் கேட்டுத்தான் இவளுடைய நடிப்பாற்றலை நான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எனக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இவளை நான் அழைப்பது மற்றவர் நடிப்பை அபிவிருத்தி செய்ய."
"ஓ! கதாநாயகியாக நடிக்குமாறு அழைத்துவிட்டு இப்போ டைரக்ஷன் பொறுப்பையும் இவள் தலையிலே கட்டியாகிவிட்டதா? இன்னும் கதை, வசனம், பாட்டு, இசை எல்லாம் பவானிதானா? மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து திரை தூக்கி இறக்குவீர்களாக்கும்?"
இதற்குள் பவானி குறுக்கிட்டு, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ என்னால் முடிந்த அளவு உதவுகிறேன். எல்லாருடைய ஒத்துழைப்பும் வேண்டும். நாடகம் வெற்றிபெற மாஜிஸ்திரேட் ஸாரின் ஒத்துழைப்பும் கூட அவசியம் தேவை" என்றாள்.