அவர் இவர்களுக்குக் கார் தருவவாவது? அதுவும் திருநீர்மலைக்குப் போக?'
"அங்கே என்னடா விசேஷம்?"
"அதை மட்டும் கேட்காதீங்க மாமா! அது டாப் ஸீக்ரெட்!"
"டேய், டேய்! நேக்கு மட்டும் சொல்லுடா!"
கல்யாணம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டான். அவனுக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. ஆனால் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது.
"ஐயோ, அம்மா என் முதுகிலே தோசை வார்த்துடுவா!"
"டேய்! நான் பிராமிஸ் பண்ணறேன். சத்தியமா ஒருத்தரிடமும் கூறமாட்டேன்."
"ரகசியத்தைச் சொன்னால் எனக்கு என்ன தருவே?"
"சாக்லேட்!"
"பூ! எங்க வீட்டிலே நேற்றுதான் பெரிய டப்பா நிறையச் சாக்லேட் வாங்கி இருக்கா அம்மா!"
'ஆமாம், ஆமாம்! பிளிமத் காரிலே போகிறவனுக்கு சாக்லேட் என்ன பிரமாதம்! ரங்கநாதன் சாக்லேட் தொழிற்சாலையையே வாங்கிக் கொடுத்து விடுவாரே! அவரால் கொடுக்க முடியாத விஷயமாச் சொல்லி இவனுக்கு ஆசை காட்ட வேண்டும்.'
"உன் பள்ளிக்கூடம் இருக்கிற தெரு முனை வரையில் இந்தக் காரை நீ ஓட்டி வரலாம்" என்றான் கல்யாணம்.
விசுவின் முகம் உடனே பிரகாசமடைந்தது. "கியர் போடலாமா?"