இந்தச் சமயம் வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டது.
"இந்தா, காமாட்சி வாயை அடக்கு! யாரோ வருகிறார்கள்" என்றார் மாசிலாமணி. " அப்புறமா உன் பிரலாபத்தை வைத்துக் கொள்ளலாம்."
"யார் வந்தால் எனக்கு என்ன? எதற்கு நான் பயப்பட வேண்டும்?"
"நன்றாயிருக்கிறது; உங்களுக்கு என்ன பயம்? நீங்கள்தான் மானம், வெட்கம் எல்லாத்தையும் விட்டவர்கள் ஆச்சே!" என்று கூறிக் கொண்டே செல்லம் உள்ளே நுழைந்தாள்.
"பார்த்தீர்களா, நான் சொன்னது சரியாய்ப் போச்சா?" என்றாள் காமாட்சி.
"நீ என்ன சொன்னாய்?" என்றார் மாசிலாமணி.
"சொன்னேன் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று! ஏண்டி கமலா, நீதான் சொல்லேன். இல்லே உனக்கும் மறந்து போச்சா?' அம்மாவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டு வளைய வருகிற அந்தப் பிள்ளை, கோர்ட்டிலே சவடாலாகப் பேசினதுதான் மிச்சம்; காரியத்தில் உறுதியாக இருக்கமாட்டான்'னு சொன்னேனா இல்லையா?"
"அவன் எதற்காக உறுதியாக நிற்கணும்? ஊரிலே உங்களைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாகப் பேசினால் அவனும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கான்.
ஆனால் காது கொடுத்துக் கேட்க முடியாத விஷயமெல்லாம் உங்களைப் பற்றி அடிபடுகிறதே!" "அப்படி என்னமா சொல்றா, எங்களைப் பற்றி?" என்று மாசிலாமணி சற்றுக் கோபமாகவே கேட்டார்.
'அதை என் வாயாலே சொல்லித்தான் ஆகணும் என்கிறீர்களாக்கும்; சொல்றேன். நீங்கள் இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் ஊராகப் போகிறது: அங்கங்கே யாராவது ஒரு கிழவனை மயக்கி இவளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கிறது; அவனிடத்தில் பணமும் நகையுமாகப் பறித்துக் கொண்டு இன்னோர் ஊரைப் பார்க்கப் போய்விடுகிற்து.இதுவே உங்கள்