Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 57 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 57 -- பவானியின் கட்டளை
தான் கைதியான கதையைக் கூறிவிட்டுக் கடைசியாக உமாகாந்தன் சொன்னான். "பவானி! நீ நம்புகிறாயோ இல்லையோ, நடந்தது இதுதான். தேசபக்தன் என்ற முறையில் ஆயுட் காலத்துக்குச் சிறையிலிருப்பேன்; ஆனால் திருடன் என்ற பட்டத்துடன் செய்யாத குற்றத்துக்குச் சிறை வாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்க என்னால் முடியவில்லை. வேதனை பிடுங்கித் தின்றது. அதனால் கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் தப்பித்துக் கொண்டு வந்தேன். இந்த நாட்டை விட்டு வெளியேறு முன் உன்னை ஒரு தடவை பார்த்து என் கதையைக் கூறிவிட வேண்டும் என்பதுதான் எனக்கு ஒரே ஆசை. அது நிறைவேறி விட்டது. இனி நான் கள்ளத் தோணி ஏறலாம்" என்றான்.
"கள்ளத் தோணியா?' என்று வியப்புக்கு மேல் வியப்படைந்தவளாகக் கேட்டாள் பவானி.
"ஆமாம், பவானி! ரயிலேறிச் சென்று பிறகு கோடிக்கரையை அடைந்துவிட்டால் அங்கிருந்து படகில் இலங்கைக்குப் போய் விடுவேன். அப்புறம் எப்படியாவது மலாய் நாட்டை அடைந்து விடுவேன். அங்கே நேதாஜி சுதந்திரப் படை திரட்டி வருகிறார் அல்லவா? அதில் சேர்ந்து விடுவேன். நான் சிறையிலிருந்து தப்பியதே அந்த நோக்கத்தில்தான்!"
பவானியின் முகம் வெளிறிற்று. தேகம் நடுங்கியது. பதற்றத்துடன், "அழகுதான்! அத்தனை ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உடல் நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள்?" என்று அதட்டலாகச் சொன்னாள். தவமிருந்து பெற்ற பொக்கிஷம் அது கிடைத்த கணத்திலேயே கைநழுவிப் போய்விடும் போலிருந்தது. அப்படி அதைப் பறி கொடுப்பதா? என்று தவித்தது அவள் உள்ளம்.
"பவானி! உடம்பில் பலம் சேரட்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருந்தால் மட்டும் ஆபத்து இல்லையா?" என்று கேட்டான் உமாகாந்தன். "உன்னையும் சேர்த்தல்லவா ஆபத்துக்கு உள்ளாக்கிய வனாவேன்! என்னைப் போக விடு, பவானி! அதற்கு முன் மூன்று வரங்களைக் கொடு!"
"நான் தான் என்னையே கொடுத்திருக்கிறேனே?" என்று விம்மினாள் பேதை.