என்னால் தாங்கவே முடியாது. அங்கே வாழ்வோ சாவோ எதுவானாலும் நாம் சேர்ந்து அனுபவிக்கலாம் இல்லையா? சுதந்திரமாக வாழ்ந்து பாரதத்தின் சுதந்திரத்துக்கும் இயன்றவரை உழைக்கலாம் அல்லவா?"
"தேவலாமே! நீ இவ்வளவு தீவிர தேச பக்தை என்பது எனக்கு இதுவரை தெரியாமல் போயிற்றே!"
"எல்லாம் சகவாச தோஷம்தான்!"
"அப்படி எத்தனை நாள் என்னுடன் பழகி விட்டாய்? கல்லூரியில் பட்டும் படாமலும் ஏதோ நண்பர்களாகப் பழகினோம். பிறகு நான் சிறைக்குப் போய்விட்டேன். இப்போது மறுபடியும் சந்தித்து முழுசாக ஒரு வாரம்கூட ஆகவில்லையே?"
"அதென்ன அப்படிக் கேட்டு விட்டீர்கள்? யுகம் யுகமாக உங்களுடன் தானே நான் நெருங்கிப் பழகிக் கொண்டிருக்கிறேன்" என்றாள் பவானி.
"அப்பப்பா! ஒரு தடவைகூடப் பேச்சில் என்னை ஜெயிக்க விடமாட்டாய்!" என்றான் உமாகாந்தன்.
பவானி சிரித்தாள். "சிறையிலிருந்து எப்படி நீங்கள் தப்பினீர்கள்? அதைச் சொல்லுங்கள். களைப்பையும் தூக்கத்தையும் விரட்ட உதவும்."
"அதற்கும் ஜப்பான்காரன்தான் உதவினான் பவானி. ஒரு நாள் மாலை சிறைச்சாலைச் சுவர் ஓரமாக நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று அபாய அறிவிப்பு சங்கு அலறியது. அவ்வளவுதான், வார்டர்களானால் என்ன, கைதிகளானால் என்ன, உயி ருக்குப் பயப்படாதவன் யார்? அவரவரும் சிறைக்குள்ளே அமைக்கப் பட்டிருந்த 'டிரென்ச்சு'க்குள் பதுங்குவதற்காக ஓடினார்கள். இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தேன் நான். முன்னேற் பாட்டின்படி நானும் வேறு மூன்று கைதிகளும் நாங்கள் உடைத்துக் கொண்டிருந்த கருங்கள் ஜல்லிக் குவியல்களுக்குப் பின்னாலேயே பதுங்கிக் கொண்டோம். வார்டர்கள் தலை மறைந்ததும் அந்த மூவரும் கோபுரம் போல் நின்று எனக்குத் தோள் கொடுத்துத் தூக்கி விட்டார்கள். பதினைந்தடிச் சுவரின் மீது அவர்கள் உதவியுடன் ஏறுவது சிரமமாக இல்லை.