இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டபோது என் தகப்பனார் இதயம் பாதிக்கப்பட்டு விட்டது. எப்படியோ சமாளித்துக் கொண்டு தம் சேமிப்பையெல்லாம் துடைத்தெடுத்து மார்வாடியிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் அப்போது படுக்கையில் விழுந்தவர் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. சீக்கிரமே இரண்டாவது 'ஹார்ட் அட்டாக்' ஏற்பட்டு உயிர் துறந்தார். வைதவ்ய நிலை அடைந்த என் தாயார் கல்கத்தாவில் வாழப் பிடிக்காதவளாகத் தன் சொந்தக் கிராமத்துக்குப் பெற்றோருடன் வசிக்கப் போய்விட்டாள். அங்கிருந்து அவள் தன் துயரத்தை யெல்லாம் வடித்து எழுதிய கடிதம் எனக்குச் சிறைச்சாலையில் கிடைத்தது.
"பவானி! நான் சிறையிலிருந்து தப்ப முடிவு செய்ததற்கு என் தாயாரின் கண்ணீர்க் கறை படிந்த முகம் சதா என் நினைவில் தோன்றிக் கொண்டிருந்தது ஒரு காரணம்" என்றான் உமாகாந்தன்.
"பாவம்! அவரை ஒரு தடவை சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாமல் மலேயாவுக்கு உங்களுடன் கப்பலேறிவிடப் போகிறேனே என்று எண்ணினால் எனக்கே வெட்கமாக இருக்கிறது" என்றாள் பவானி. அங்கிருந்து பத்தாவது மைல் கல்லில் அவர்கள் பயணம் முடிந்துவிடப் போவதை அக்கணத்தில் அறியாதவளாக.
----------------
தொடரும்...