அந்தப் பக்கம் குதிப்பதுதான் அச்ச மளிப்பதாய் இருந்தது. வந்தது வரட்டும் என்று கண்களை மூடிக் கொண்டு குதித்தேன். நல்ல வேளை கைகால் ஏதும் முறியவில்லை.
"அப்புறம்?"
"நன்றாக இருள் கவியும்வரை ஒரு பாதாளச் சாக்கடையின் உள்ளே இடுப்பளவு நீரில் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு நின்றேன். அபாயம் நீங்கியதற்கு அறிகுறியாகச் சங்கொலிப்பதும் போலீஸார் என்னைத் தேட இங்குமங்கும் விரைவதும் இலேசாகக் கேட்டன. மனசு கிடந்து திக் திக்கென்று அடித்துக்கொண்டது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சந்தடி யெல்லாம் அடங்கி விட்டது. நன்றாக இருட்டியிருக்கும் என்று தோன்றியபோது மெல்ல வெளியே வந்து இருளில் பதுங்கிப் பதுங்கி நடந்தேன். கங்கையில் இறங்கிச் சாக்கடை அழுக்குப் போகக் குளித்தேன்.
"அந்த அதிகாலை நேரத்தில் ஆற்றங்கரையில் ஒரு பெரியவர் குளித்துவிட்டுச் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கண்களை மூடித் தியானத்தில் இருந்த சமயம் கரையில் இருந்த அவர் துணி மணிகளை எடுத்துக் கொண்டு சந்தடியின்றி ஓடிவிட்டேன். சிறிது தூரம் போய் ஒரு மரத்துக்குப் பின்னால் உடைகளை அணிந்து கொண்டு கைதி உடைகளை ஒரு பெரிய பாறாங்கல்லைச் சுற்றிக் கட்டி ஆற்றில் எறிந்து விட்டேன். மகராஜன் துணிமணிகளை எனக்குத் தந்தது மட்டுமல்ல; அதில் ஒரு மணி பர்ஸும் வைத்திருந்தான். அதிலிருந்த பணம் என் தாயாரின் சொந்தக் கிராமத்துக்கு நான் வந்து சேரும்வரை எனக்குப் போதுமானதாய் இருந்தது. நல்லவேளை! பர்ஸில் விலாசமும் இருந்தது. அம்மாவிடம் பணம் கேட்டுப் போஸ்டல் ஆர்டர் வாங்கி அனுப்பி விட்டேன்."
"உங்கள் தாயார் கல்கத்தாவிலிருந்து கிராமத்துக்கு வந்து விட்டாரா? ஏன்?"
"அது உனக்குத் தெரியாதா? ஆம்; தெரிய நியாயம் இல்லைதான். நான் கையும் களவுமாகப் பிடிபட்டதே என் தகப்பனாருக்குப் பெரிய அதிர்ச்சி. அதுவும் அவர் வேலை பார்த்து வந்த பாங்கியிலேயே அவர் மகன் கொள்ளையடித்து விட்டதை - அந்த அவமானத்தை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. போதாக் குறைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் என் அண்ணனுக்குக் கடன் கொடுத்த மார்வாடி வீட்டுக்கு வந்து கத்தியிருக்கிறான். இந்த