குற்றவாளி என்று எனக்குத் தெரியாது; ஏதோ மனிதாபிமானத்தால் காயம்பட்டவனுக்கு உதவ முற் பட்டேன்; பிறகு அவன் தப்பிச் செல்ல வேண்டி என்னைக் காரோட்டி வருமாறு கட்டாயப்படுத்தினான்; அதற்கு இணங்கா விட்டால் கொன்று விடுவதாக மிரட்டினான்' என்று நீ எழுதித் தரவேண்டும். நீ விடுதலை பெற அது ஒன்றுதான் வழி, பவானி!"
"அப்படிப் பொய்யான ஒரு வாக்குமூலம் எழுதித் தந்து நான் விடுதலை பெற விரும்பவில்லை, மாமா! நீங்கள் உமாவிடம் பேசுங்கள். அவர் வழக்கை நான் நடத்தச் சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். கோர்ட்டில் அவர் உண்மைகளைக் கூற ஒப்புக் கொள்ளச் செய்யுங்கள். அதற்கு மட்டும் அவர் சம்மதித்தால் குறுக்கு விசாரணையில் மாஜிஸ்திரேட்டைச் சந்தி சிரிக்கப் பண்ணி விடுவேன் நான். உமாகாந்த் நிச்சயம் விடுதலை பெற்று விடுவார்."
குணசேகரன் உமாகாந்திடம் போய் நடந்ததையெல்லாம் விவரித்தார். மாஜிஸ்திரேட் கோவர்த்தனனின் யோசனையையும் பவானியின் பதில் யோசனையையும் கூறினார்.
"குணசேகரன் ஸார்! ஆபத்தான ஒரு கட்டத்தில் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை ஒரு நாளும் மீறமாட்டேன். அப்படி நான் செய்தால் இத்தனை நாட்கள் நான் சிறையிலிருந்து பட்ட அவதிக்கெல்லாம் என்ன அர்த்தம்? அத்தனையும் வியர்த்தமாக அல்லவா முடியும்?"
"குற்றமற்றவன் சிறையில் வாடுவதும் குற்றவாளி வெளியே சுதந்திரமாக உலாவுவதும் என்ன நியாயம்?"
"தண்டிப்பது கடவுள் பொறுப்பு. மன்னிப்பது மனிதன் பாக்கியம்."
"உன் லட்சிய வெறி எனக்கொன்றும் புரியவில்லை" என்றார் குணசேகரன். "இத்தனை நாட்களாய் உன்னை நீயே வருத்திக் கொண்டாய். இப்போது உன்னைக் காதலிப்பது தவிர வேறு ஒரு தவறும் செய்தறியாத என் மருமகளையும் சிறையில் தள்ளி விடப் போகிறாய். இதொன்றுதான் எனக்குத் தெளிவாகிறது."
"நீங்கள் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், ஸார்! மாஜிஸ்திரேட் கேட்டது போன்ற வாக்குமூலத்தைப் பவானி எழுதாவிட்டால் என்ன? நான் எழுதித் தருகிறென். போலீஸாருக்கு