கெட்டுப்போனாலும் உங்களுக்குக் கவலை இல்லை"என்று பவானி கூறி விம்மினாள்.
"என்னை மன்னித்துவிடு, பவானி!" என்றான் உமாகாந்தன்.
"இப்போது மன்னிக்கமாட்டேன். இன்னும் நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனை பெற்று மறுபடியும் சிறையிலிருந்து விட்டு வெளியே வரும்போது, பவானி என்ற தலை நரைத்த கிழவி ஒருத்தி உங்களுக்காக இங்கேயே காத்திருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள். அப்போதுதான் மன்னிப்பேன்" என்று அழுது கொண்டே சொன்னாள் பவானி.
உமாகாந்தன் மெய்சிலிர்த்தான். "எத்தனையோ கற்புக்கரசிகளைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உனக்கு நிகராக யாருமில்லை" என்றான்.
" நானும் எத்தனையோ சத்தியசந்தர்களைப் பற்றிப் புராணங்களில் படித்திருக்கிறேன். உங்களைவிட அசடான ஒருத்தர் கிடையாது" என்று கூறிப் பவானி கண்ணீருக் கிடையில் புன்னகை பூத்தாள். மழை ஓய்ந்ததும் கதிரவனைப்பார்த்துச் சிரிக்கும் மலராக விளங்கியது அவள் முகம். "போகட்டும். ஒரு வாக்குறுதி கொடுங்கள்" என்றாள்.
"என்ன பவானி?"
" நாலு வருஷமோ ஆறு வருஷமோ தண்டனைக் காலம் எதுவானாலும் முழுக்க அனுபவித்துவிட்டு வாருங்கள். மறுபடியும் தப்பி ஓடி வந்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!"
உமாகாந்தன் உரக்கச் சிரித்தான். " அப்படியே ஆகட்டும், பவானி! ஆனால் இந்த முறை தண்டனையை அனுபவிப்பது எனக் கொன்றும் அவ்வளவு சிரமமாக இராது. உன் ஆழ்ந்த அசைக்க முடியாத காதலைப் புரிந்து கொண்டிருக்கிறேன். என்னை நீ தவறாக எண்ணவில்லை என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இவை போதும். ஆறு வருஷமானாலும் ஆறு நாட்களாக ஓட்டிவிட்டு ஓடி வந்து விடுவேன்" என்றான்.
----------------
தொடரும்...