அதுவே போதும். 'பவானிக்கு நான் சிறையிலிருந்து தப்பிய கைதி என்று தெரியாது; கருணையினால் உதவினாள்; நான் சற்றுக் குணமடைந்ததும் ஸி.ஐ.டிகளிடமிருந்து தப்ப அவள் காரைப் பயன் படுத்திக் கொண்டேன்; பவானியை மிரட்டிக் காரோட்டி வரச் செய்தேன்' இவ்வளவு தானே எழுத வேண்டும்? எங்கே, ஒரு பேனாவும் தாளும் கொடுங்கள்!"
"ஐயய்யோ! நான் அப்படி ஒரு கடிதத்தை உன்னிடமிருந்து எழுதி வாங்கிப் போய் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்ததாகத் தெரிந்தால் அப்புறம் பவானி என்னைச் சும்மாவிட மாட்டாள். அக்கினியாகச் சொற்களைக் கொட்டி என்னை வறுத்தெடுத்து விடுவாள். வேண்டாமப்பா, வேண்டாம்!"
"நீங்கள் வாங்கிக் கொள்ளாவிட்டால் என்ன? இங்கே வருகிற இன்ஸ்பெக்டரிடம் எழுதிக் கொடுத்து அனுப்புகிறேன். கோவர்த்தனனுக்கு"
"என்னமோ செய், என் காதில் மட்டும் போடாதே! நான் வருகிறேன்" என்றார் குணசேகரன்.
சில மணி நேரம் கழித்துப் பவானி இருந்த லாக்-அப் அறைக் கதவு திறந்தது. "நீங்கள் போகலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.
பவானிக்கு என்ன நடந்திருக்க வேண்டும் என்று உடனே புரிந்து விட்டது. உமாகாந்தனின் வக்கீல் என்ற முறையில் அவனைப் பார்க்க அனுமதி பெற்று உடனே போனாள்.
"நீங்கள் இப்படிச் செய்தது கொஞ்சம் கூடச் சரியில்லை. இப்போதுகூட ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை. உங்கள் வக்கீலாக இருந்து வாதாட அனுமதி கொடுங்கள். கோர்ட்டில் விசாரிக்கும்போது என் கேள்விகளுக்கு உண்மைகளைப் பதிலாகச் சொல்லுங்கள். நீங்கள் நிச்சயம் விடுதலை பெறலாம்" என்றாள்.
"உன் வாதத் திறமையெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் உன் வேண்டுகோளுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்." என்றான் உமாகாந்தன்.
"உங்களுக்கு உங்களுடைய அர்த்தமற்ற, அபத்தமான வாக்குறுதிதான் முக்கியம். நான் எக்கேடு