Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 63 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 63 -- உல்லாச வேளை
அன்று மாலை வாங்கிய ஓர் உயர் ரக விஸ்கி பாட்டிலுடன் கோவர்த்தனனைப் பார்க்கப்போனான் கலயாணம். மல்லிகை மலர்ந்து மணம் பரப்பும் நேரம். கோவர்த்தனன் வீட்டுத் தோட்டத்தில் மல்லிகையுடன் நைட் குவீன் மலர்களின் மணமும் சேர்ந்து நறுமணம் கனமாகச் சூழ்ந்திருந்தது.
"எங்கேப்பா வந்தாய் மறுபடியும்?" என்றார் கோவர்த்தனன்.
"உங்கள் வெற்றியைக் கொண்டாடத்தான் ஸார்!" என்று சொல்லிக் கொண்டேதான் கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பிரித்தான் கல்யாணம்.
"எதைச் சொல்கிறாய்? என்ன வெற்றி பெற்றுவிட்டேன் நான்?" " என்ன ஸார், அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? மிஸ்டர் இன்ஃபுளூவென்ஸாவைப் பிடித்து உள்ளே தள்ளவில்லையா? இனிமேல் பவானியை நீங்கள் அடையத் தடை என்ன இருக்கிறது? முகூர்த்த நாள் பார்க்க வேண்டியதுதானே பாக்கி?" என்ற கல்யாணம் பிரித்த பெட்டிக்குள்ளிருந்து மதுப் பாட்டிலை எடுத்து மேஜையின் மீது வைத்தான்.
முழுசும் புதுசுமான ஜானிவாக்கர் புட்டியைப் பார்த்ததும் கோவர்த்தனன் முகம் மலர்ந்தது.
"அதைச் சொல்கிறாயா? பவானி அந்தத் தடியனிடமிருந்து காப்பாற்றப்பட்டதற்குச் சந்தோஷப்படவேண்டியதுதான். கம் லெட் அஸ் ஸெலிபரேட்! யூ மஸ்ட் ஜாயின் மி" என்றார் கோவர்த்தனன். தோட்டக்காரனை அழைத்து வராந்தாவிலிருந்த வசதியான நாற்காலிகள் இரண்டைத் தோட்டத்தில் எடுத்துப் போடச்சொன்னார். "இந்தாப்பா! அந்தக் காஃபி டேபிளையும் இப்படி கொண்டு வந்து போடு. அப்புறம் மணியைக் கூப்பிடு" என்றார்.
"இத்தனை மல்லி மலர்களின் வாசனையும் இனி வீண்போகாது ஸார். சரம் சரமாகத் தொடுக்கச் செய்து பவானிக்குக் கொண்டையைச் சுற்றி நீங்களே உங்கள் கரத்தால் சூட்டலாம்" என்றான் கல்யாணம்.