Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 64 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 64 -- கடைசி பானம்!
பவானிக்கும் கமலாவுக்கும் தான் இழைத்துவிட்ட நம்பிக்கை துரோகத்துக்குப் பரிகாரமாக ஏதாவது செய்ய நினைத்தான் கல்யாணம். கோவர்த்தனன் உமாகாந்திடம் காட்டும் வெறுப்புக்குப் பின்னணியில் கடமை உணர்ச்சிக்கும் மேலாக ஏதோ அந்தரங்கம் இருக்க வேண்டும் என்று தோன்றிற்று அவனுக்கு. ஏற்கனவே ஸி.ஐ.டி.க்கள் உமாகாந்தின் படத்தை அவனிடம் காட்டியபோது கோவர்த்தனின் முக ஜாடையை அதில் கண்டு அவன் அதிசயித்திருந்தான். உமாகாந்தனைப் பவானி வீட்டில் நேரில் சந்தித்த பிறகு அவன் குழப்பம் அதிகரித்திருந்தது. எனவேதான் ஒரு பாட்டில் விஸ்கியுடன் கோவர்த்தனனைத் தேடி வந்தான் கல்யாணம். அவர் நாவைத் தளர்த்தி ஏதாவது பேசவைக்கலாம் என்ற அபிப்பிராயம் அவனுக்கு இருந்தது.
ஆனால் கோவர்த்தனன் நிறையப் பேசிய போதிலும் கல்யாணம் எதிர்பார்த்ததுபோல் புதிய திருப்பம் ஏதும் ஏற்படக் கூடிய தகவலாக ஒன்றும் தெரிய வரவில்லை. உமாகாந்தனைத் தன் தம்பி என்றே ஒப்புக்கொண்ட கோவர்த்தனன், அதற்காக அவனிடம் கருணை காட்ட முடியாது என்று அழுத்தமாகக் கூறினார்.
இதையெல்லாம் ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்த சமையல்காரர் மணி நடந்துகொண்டவிதம் மட்டும் கல்யாணத்துக்கு ஆச்சரியம் அளித்தது. 'இந்த மனுஷன் எதற்காக மறைந்திருந்து நான் கோவர்த்தனனிடம் பேசுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்? உமாகாந்தன் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் கையைப்பிசைகிறாரே எதற்கு?" என்று எண்ணினான். மணியின் கோபத்தை அல்லது தாபத்தை வேண்டுமென்றே மேலும் தூண்டிவிடத் தீர்மானித்துப் பேசினான்.
"நன்றாகச் சொன்னீர்கள் சார்! மனுநீதிச் சோழன் அல்லது சிபிச் சக்கரவர்த்தி பரம்பரையில் உதித்தவரா யிருக்க வேண்டும் நீங்கள்! சொந்தத் தம்பி என்பதற்காகச் சட்டத்தை மறந்து நீங்கள் காரியம் செய்ய முடியுமா? 'ஐயோ பாவம்! பிழைத்துப் போகட்டும்' என்று பாங்குக் கொள்ளைக் காரர்களையும், ராஜத் துரோகிகளையும் வெளியே நடமாட விட்டால் என்னவாகிறது? அராஜகம் தாண்டவமாடும்! இந்த மாதிரி ஆசாமிகளைச் சிறையில் தள்ளினால் கூடப் போதாது ஸார். நாற்சந்தியில் நிற்கவைத்துத் தண்டிக்க வேண்டும்!"