அதன் பிறகு பவானி ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக அவளுக்கு அவர்கள் வீட்டில் விருந்தளிக்க வேண்டும் என்று அண்ணனும் தங்கையும் தீர்மானித்தார்கள்.
பவானி, பசுமலைக்குச் செல்ல வேண்டும் என்கிற செய்தியை நாகராஜன் வீட்டில் யாருமே வரவேற்க வில்லை.
சர்க்கார் உத்தரவைப் பவானி நாகராஜனிடம் காண்பித்ததும் அவன் பெரிய குரலில், "கோமதி இங்கே வாயேன். நீயும் மூட்டை முடிச்சுகளைக் கட்டு" என்று அழைத்துக் கூறினான்.
”எதற்கு? எங்கே போவதற்கு என்று சொல்ல வில்லையே? இனிமேல் துரை மிஸஸ் இல்லாமல் வெளியே கிளம்பமாட்டீர்களோ?" என்று கேலி செய்தாள்.
”உன் நாத்தனார் ஊருக்குக் கிளம்புகிறாளாம். அவள் இல்லாமல் நீ இந்த வீட்டில் இருந்தால் தலை சுற்றல், மயக்கம், அஜீரணம் எல்லாம் உனக்கு வந்து விடுமே! அப்பா! உன்னோடும், உன் வியாதிகளோடும் மருந்துப் பட்டியல்களோடும் நான் பட்டபாடு எனக்கல்லவா தெரியும்?" என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தான். ”என்ன அண்ணா இது? என்னால் தான் உலகமே நடக்கிற மாதிரி நீ பேசுகிறாய்?" என்று கேட்டாள் பவானி சிரித்துக் கொண்டே.
"மாமா. அம்மா பசுமலைக்குப் போனாலும், நான் இங்கேதான் இருந்தாக வேண்டும். இந்த ஊரில் விசிறிகளுக்கெல்லாம் காம்புகள் நீளம்' ' என்று கூறியவாறே பாலு தன் முதுகைத் தடவிக் கொண்டான்.
”இது ஒரு நொண்டிச் சாக்கு இவனுக்கு. நீ சென்னையை விட்டுப் போகமாட்டாய் அப்பா. தினம் ஜெயஸ்ரீயை காலேஜ் பஸ்ஸில் ஏற்றிவிட்டுத்தான் நீ காலேஜுக்குப் போகிறாயாமே?....' 'சுமதி சமயம் பார்த்து குட்டை உடைத்து விட்டாள்.
என்ன பேசுவது என்று புரிமாமல் பாலு திகைத்தான். அங்கிருந்த பெரியவர்கள் யாவரும் அர்த்த புஷ்டியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பவானியின் உள்ளத்திலே மகிழ்ச்சி வெள்ளம் அலைமோதியது.