அந்தத் தொண்டர்களின் உள்ளம் மாசு மருவற்று இருக்க வேண்டும். தன்னுடையது என்கிற பற்று நீங்க வேண் டும். அவளுடைய கண்ணீரைத் துடைக்க அவர்கள் உள்ளம் பண்பட்டிருக்க வேண்டும். நோயிலும் துன்பத் திலும் இன்னல்களிலும் பங்கெடுத்துக்கொண்டு ஆற்றும் பணியே கடவுள் பணி என்னும் உண்மையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய பல நல்முத்துக்களை இந்தப் பாரத நாடு ஈன்றிருக் கிறது. அவர்கள் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் ஆழ் கடலின் கீழ் ஒளிந்து வாழும் முத்துச் சிப்பிகளைப் போல மறைந்து கிடக்கிறார்கள். அவர்களில் ஒரு முத்துச்சிப்பியைத் தான் ஸ்ரீதரன் கண்டெடுத்து உலகப் பணிக்கு அர்ப்பணிக்க முன் வந்தார்.
அந்த ஆனந்தத்தில் லயித்து அவர் தம்மையே மறந்திருந்தார்.
”டாக்டர்! நாளைக்கு நான் பசுமலைக்குக் கிளம்புறேன்..." பவானி உள்ளம் நெகிழ மறுபடியும் டாக்டரிடம் பேசினாள்.
”போய் வருகிறீர்களா? சற்று முன் நீங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டபோது நான் ஏதோ யோசனையில் மூழ்கி இருந்தேன்" என்றார் அவர்.
ராதா அவர் அருகில் வந்து நின்றாள்.
"அண்ணா ! நானும் பவானியுடன் பசுமலைக்குப் போகிறேன். சில வருஷங்கள் அங்கே இருக்கிறேன்" என்றாள்.
"ஏன் அப்படி?" என்று கேட்டார் அவர்.
“இல்லை அண்ணா ! அவர் இல்லாமல் இந்த வீட்டில் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. சில காலம் நான் என்னை மறந்து இருக்க ஆசைப்படுகிறேன்."
ஸ்ரீதரன் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. விருந்தினர் யாவரும் தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஸ்ரீதரனும் ராதாவும் அன்று இரவு வெகு நேரம் வரை தூங்கவில்லை. பவானியின் சிறப்பான குணங்களைப்பற்றி அவர் தம் தங்கையிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.