நேரமும் ஆகும்."
உடையைக் கழற்றியதும் சந்திரன் துடும் எனக் குதித்து நீரில் ஆழ்ந்து மேலே வந்தான். எனக்கு அது அரிய பெரிய வித்தையாகத் தோன்றியது. வேலூரில் என் அத்தைமகன் இப்படிக் குதித்து எழுவதை இமைகொட்டாமல் பார்த்து வியந்து பெருமூச்சு விட்டிருக்கிறேன். சந்திரன் குதித்து நீந்திய போதும் அப்படித்தான் வியந்து பார்த்தேன்.
"சந்திரா! ஊர்க்குப் போவதற்குள் நானும் நீந்தக் கற்றுக் கொள்ளட்டுமா?" என்று ஆவலோடு கேட்டேன்.
சந்திரன் பேசுவதற்கு முன், தோப்புக்காவலாளியின் குரல் கேட்டது. "அதற்கு என்ன சாமி! வாங்க இறங்குங்க. ஒரே நாளில் நான் கற்றுத் தருவேன்" என்றான்.
அவனுடைய தன்னம்பிக்கை எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது.
"இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்" என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே.
காவலாள் சொக்கானும், "சரி, சாமி! நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்" என்றான்.
"புருடை என்றால் என்ன?"
"சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது"
"அதை என்ன செய்வது?"
"அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே மிதக்கலாம், கையால் அடித்து நீந்தலாம்."
இதைக் கேட்டதும் என் மனம் குதித்தது. கிணற்றினுள் நீந்தி வருவது போல் கற்பனை செய்து