களித்தேன்.
வீட்டுக்குத் திரும்பியபோது, அத்தை கவலையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். "வேலு! நீயுமா கிணற்றில் இறங்கினாய்?" என்று அத்தை கேட்டார்.
"இல்லை, சந்திரன் மட்டும் குளித்தான்."
"வேண்டாம்’பா; உடம்புக்கு ஆகாது. உனக்கு நீந்தவும் தெரியாது."
"எனக்கு ...." என்று நான் வாய் திறந்து நாளைய முயற்சியைச் சொல்வதற்குள் சந்திரன் கண்ணாலேயே என்னைத் தடுத்தான்.
"உனக்கு வெந்நீர் வைத்திருக்கிறேன். வா. குளித்து விடு" என்றார் அத்தை.
சந்திரன் இப்படி அத்தைக்குத் தெரியாமல் மறைத்தது எனக்குத் தவறாகத் தோன்றியது. இருந்தாலும், நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் அந்தத் தவற்றிற்கு உடந்தையாக இருந்தேன். யாருக்கும் சொல்லாமல் மனத்திற்குள் வைத்திருந்தேன்.
சிற்றுண்டி முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வேலையாள் மாசன் ஒரு கூடை நிறைய எதையோ சுமந்துகொண்டு வந்து எங்கள் எதிரே இறக்கினான். எல்லாம் நுங்காக இருந்தன.
"யார் வெட்டியது?" என்றேன்.
"அவனே வெட்டிக்கொண்டு வந்திருப்பான்" என்றான் சந்திரன்.
"ஆமாம். நான் ஏறாத மரமே இல்லை இந்த ஊரில்" என்றான் மாசன்.
உடனே நுங்கு தின்னத் தொடங்கினோம்.
பகலுணவுக்குப் பிறகு சிறிது படுத்திருந்தோம். மாசன் எங்கள் அருகே வந்து பார்த்து, "தூங்குகிறீர்களோ என்று பார்த்தேன்" என்றான்.