(Reading time: 23 - 45 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

போகிறாய்" என்றான் சந்திரன்.

  

கற்பகம் கைகொட்டிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.

  

மறுநாள் காலையில் எழுந்து தோப்புப் பக்கம் சென்றோம். வழியில் நடுத்தர வயது உள்ள ஓர் அம்மா சந்திரனை வழிமறித்து, "என்ன மருமகனே! எப்போது வந்தே? பேசாமல் போறேயே. என் பெண்ணைக் கட்டிக் கொள்ளாவிட்டாலும் வாயைத் திறந்து பேசிவிட்டுப் போகக்கூடாதா?" என்றார். சந்திரன் வெட்கத்தோடு விடை சொன்னான். மறுபடியும் அந்த அம்மா, "பேட்டைக்குப் போனாயே! உன் பெண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்தே, மாமிக்கு என்ன கொண்டு வந்தே, ஒரு பட்டுச்சேலை வாங்கித் தரமாட்டாயா?" என்றார். சந்திரன் தலைகுனிந்தபடியே என்னுடன் வந்துவிட்டான்.

  

தோப்பை அணுகியவுடன், "இந்த ஊரார் இப்படித்தான். நாங்கள் இந்த ஊரில் பழைய குடி. செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். அதனால் ஆண் பெண் எல்லாரும் இப்படிப் பேசுவார்கள்" என்றான்.

  

நான் அவனைப் பார்த்துச் சிரித்து, "உன் பாடு யோகம் தான். இந்த ஊரில் உனக்கு எத்தனையோ மாமி வீடுகளும் எத்தனையோ மனைவிமாரும் இருப்பதாகத் தெரிகிறதே! உனக்கு எப்போது திருமணம் ஆச்சு? எத்தனை திருமணம் ஆச்சு?" என்றேன்.

  

"சரிதான் போ அய்யா! இந்த அம்மா என் மாமியாரா? அவளுடைய மகள் எனக்குப் பெரியவள். என் அக்கா போல வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஓர் எழுத்துக்கூடத் தெரியாது. மாடு போல் உழைக்கத் தெரியும். கூடை கூடையாய்ச் சுமக்கத் தெரியும். குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துவரத் தெரியும். இதெல்லாம் வெறும் பேச்சுக்கு" என்றான் சந்திரன்.

  

"எங்கள் வீட்டில் இப்படி யாராவது மருமகன் பெண்டாட்டி என்றெல்லாம் என்னிடம் பேசினால், அம்மாவுக்குப் பிடிக்காது. சின்ன வயசிலே இந்தப் பேச்செல்லாம் தப்பு அல்லவா?" என்றேன்.

  

"இங்கே இதெல்லாம் பழக்கம் ஆகிவிட்டது. தப்பாக எண்ணமாட்டார்கள்."

  

"நீயும் பெண்களோடு இப்படி வேடிக்கையாகப் பேசுவாயா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.