கூடம் அமைத்திருந்தார்கள். பெரிய பெரிய அறைகளும் அவற்றை அடுத்தாற்போல் களஞ்சியங்களும் இருந்தன. ஒரே வேளையில் நூறு பேர் உட்கார்ந்து உண்ணக்கூடிய அவ்வளவு இடப்பரப்பு இருந்தது. நான் இருந்த அந்தப் பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தேன். தேங்காய்கள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் அரிசி கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் சில மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எண்ணெய் டின்கள் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன.
சந்திரனுடைய தந்தை வந்தவுடன் என்னைப் பார்த்து வியப்பு அடைந்தார். "நீயும் வந்தது மிகவும் நல்லது. நான் எதிர்பார்த்தேன். தேர்வு எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீர்கள்? சந்திரன் தேர்ச்சி பெற்று விடுவானா?" என்று கேட்டார். என்னுடைய விடைகள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தன.
கற்பகமும் அவளுடைய தாயும் சில தட்டுகளைக் கொண்டுவந்து எங்கள் முன் வைத்தார்கள். மிளகுப் பொங்கலும் முறுக்கும் இருந்தன. சந்திரனும் நானும் தின்றோம். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவனுடைய தாய் வற்புறுத்தினார். "வற்புறுத்த வேண்டா அம்மா. உடம்பு கெட்டுவிடும். தேவையானால் என்னைப் போல் கேட்டுச் சாப்பிடட்டும்" என்றான் சந்திரன்.
"சந்திரா! இது என்ன இது? உடம்பு கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும் என்று பல்லவி பாடுகிறாய், போதும் போதும்" என்றேன்.
"உங்கள் அம்மா எவ்வளவு கவலைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்."
"உன்னால் உடம்பைப் பற்றிய கவலையே போய், ஒரு துணிச்சலே வந்து விடும்போல் இருக்கிறதே."
"வரட்டும்; மிக மிக நல்லது."
ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. அதைக் கண்டதும் எனக்கு அச்சமாக இருந்தது. அது சந்திரனிடம் நெருங்கி வாலைக் குழைத்துக் குழைத்து அவனுடைய கையை நக்கியது. என்னை நெருங்கியது. நான் கால்களை மேலே எடுத்துச் சுவர்