(Reading time: 23 - 45 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

அந்தந்தக் குடும்பத்து முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.

  

"அதிலே ஒரு கணக்கு ஒழுங்கு உண்டா?"

  

"ஆமாம். பங்காளிகள் முறை உண்டு. சம்பந்தி முறையும் உண்டு. மற்றொன்றாக மாறாது."

  

எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.

  

அன்று இரவு ஏழு மணிக்கு நிலாப் புறப்பட்டது. கிழக்கே தென்னந்தோப்பினிடையே ஒரு புதிய ஒளியும் வண்ணமும் கண்டேன். தோப்பை யாரோ அலங்காரம் செய்வதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் தோப்புக்கு மேலே வெண்கதிர்கள் மெல்லத் தோன்றின. எழுந்துவரும் நிலாவை வரவேற்பதற்காக வான வழியில் கூடிய கூட்டம் போல், மேகம் பல தலைகளாய்த் தோன்றிக் காட்சி அளித்தது. நிலாவும் மேலே வந்தது. மேகக் கூட்டம் மேலும் சிதைந்து செம்மறியாட்டுக் கூட்டம் போல் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த மேகக் கூட்டத்தின் இடையே நிலாத் தோன்ற, கூட்டம் மேலும் கரைந்து, சிறு சிறு மணல் குவியலாக, ஆயிரக்கணக்கான குவியலாகத் தோற்றமளித்தது. அந்த மணல் குவியல்களுக்கிடையே மகிழ்ந்து முகம்காட்டும் பெண் போல் விளங்கியது நிலா. எனக்கு உடனே கற்பகத்தின் முகம் நினைவுக்கு வந்தது. அவளும் அப்போது அங்கே வந்து, "என்ன அண்ணா! அவர் நிலாவை அப்படிப் பார்க்கிறாரே" என்றாள்.

  

சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். "சந்திரா! உண்மையாகவே இவ்வளவு அழகாக நிலா வருவதை நான் எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை. சந்திரனுடைய அழகை இங்கே அடிக்கடி அப்பா பார்த்து மகிழ்ந்திருப்பார். அதனால்தான் உனக்குச் சந்திரன் என்று பெயர் வைத்திருப்பார்" என்றேன்.

  

"அப்படியானால் இவள் பெயர்?" என்று தன் தங்கையைக் காட்டினான் சந்திரன்.

  

"இந்தத் தோப்பு அவருக்கு அப்போது வானுலகத்துக் கற்பகச் சோலை போல் தோன்றியிருக்கும்" என்றேன்.

  

"நீ எதிர்காலத்தில் பெரிய புலவன் ஆகப் போகிறாய். இல்லாத புளுகு எல்லாம் புளுகப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.