எனக்கு இது வியப்பாக இருந்தது.
சிறிது நேரத்தில் ஒரு கிழவர் அந்தப் பக்கம் வந்தவர், சந்திரனைப் பார்த்து, "யார் என் மச்சான் பிள்ளையா?" எப்போ வந்தே? மொட்டையம்மாவும் வந்திருக்குதா?" என்றார்.
சந்திரன் ஆம் ஆம் என்று விடை சொன்ன பிறகு, அந்தக் கிழவர் என்னைப் பார்த்து, "யார் அப்பா" என்றார்.
"இவன் பேட்டையில் என்னோடு படிக்கிற பிள்ளை" என்றான் சந்திரன்.
கிழவர் நகர்ந்தபிறகு, சந்திரனைப் பார்த்து, "மொட்டையம்மா யார்? அத்தையா?" என்றேன்.
"ஆமாம். அத்தைதான். இந்த ஊரிலே மொட்டையம்மா என்று சொன்னால்தான் அத்தையைப் பற்றித் தெரியும். சின்ன வயதிலே ஒரு பெரிய காய்ச்சல் வந்து தலைமயிர் உதிர்ந்து போச்சாம். மறுபடியும் முடிவளர நெடுங்காலம் ஆச்சாம். அதனால் அப்படிப் பெயர் வந்துவிட்டது."
"இயற்கையான பெயர் என்ன?"
"சிவகாமி என்று பெயர். ஆனால் அந்தப் பெயரைச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. எனக்கும் போன வருசம் வரையில் தெரியாது. அப்பா ஒரு நாள் சொன்னார். அத்தை அப்பாவை என்ன என்று கூப்பிடுவார், தெரியுமா?"
"என்ன என்று கூப்பிடுவார்?"
"குழந்தை என்று கூப்பிடுவார். தம்பி என்று சொல்வது எப்போதோ ஒரு முறைதான் இருக்கும்."
"இந்த ஊரில் அத்தையையும் முறையிட்டுத்தான் அழைப்பார்களா?"
"ஆமாம். அண்ணி, அத்தை, அக்கா, பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்று அவரவர்கள்