Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 06 - மு. வரதராசனார்
பெருங்காஞ்சி என் உள்ளத்திற்குப் பிடித்த ஊராக இருந்தது. கண்ணிற்கு இனிய காட்சிகள் பல அங்கே இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும் செல்லும் சாலையாக நீண்ட ஏரிக்கரை அகலமாக அமைந்திருந்த காட்சியும் கரை நெடுக மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன. இடக்கைப் பக்கம் ஏரியும் வலக்கைப் பக்கம் வயல்களும் எதிரே கரிமலையும் சோழ சிங்கபுர மலையும் கண்டேன். அதுபோன்ற காட்சி எனக்கு - நகரத்தில் சில தெருக்களையே திரும்பத் திரும்பக் கண்டு வந்த எனக்கு - இன்பமாக இருந்தது. என் சொந்த அத்தையின் ஊராகிய வேலூர்க்குப்போய் அங்கே ஏரியையும் வயல்களையும் கண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த ஊர்க் காட்சி என் மனத்துக்கு அவ்வளவு இன்பமாக இருந்ததில்லை. பெருங்காஞ்சியில் சந்திரனும் கற்பகமும் வாழ்ந்ததே ஒரு வகையில் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
"இப்போது ஏரியில் தண்ணீர் வற்றிவிட்டது. மழை பெய்து வெள்ளம் வந்து நீர் நிறைந்திருக்கும்போது எங்கள் ஊர் ஏரியை வந்து பார்க்கணும். அப்போதுதான் இதன் உண்மையான அழகு தெரியும்" என்றான் சந்திரன்.
"எந்த மாதத்தில்?"
"அதாவது" என்று சந்திரன் தயங்கினான்.
"புரட்டாசி ஐப்பசியில்" என்றார் அத்தை.
"புரட்டாசி ஐப்பசி என்றால் என்ன மாதம்" என்று நான் கேட்டேன்.
"செப்டெம்பர் அக்டோபர்" என்று சந்திரன் சொன்னான்.
"அப்படியானால் ஒரு முறை அப்போதே வருவேன். கால் தேர்வு முடிந்து செப்டெம்பரில் பதினைந்து நாள் விடுமுறை விடுவார்களே, அப்போது வருவேன்" என்றேன்.
ஏரிக்கரையைக் கடந்து ஊர்க்குள் சென்றோம். ஊர் சின்ன ஊர்தான். சில ஓட்டு வீடுகளும் பல மஞ்சம்புல் வீடுகளும் காணப்பட்டன. அந்த ஊரிலேயே சந்திரனுடைய வீடுதான் எடுப்பாகவும்