பெரியதாகவும் இருந்தது. வீட்டின் எதிரே தென்னங்கன்றுகள் ஆறு வரிசையாக வளர்ந்து வந்தன. எதிரே ஒரு மாந்தோப்பும் தென்னந்தோப்பும் காணப்பட்டன. என் பார்வையைக் கண்ட சந்திரன், "இரண்டும் எங்கள் தோப்புகள் தான்" என்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சந்திரனுடைய தாய் எங்களை - சிறப்பாக என்னை - வரவேற்றார். கற்பகம் இல்லாதது கண்டு காரணம் தெரியாமல் நின்றேன். எங்கோ போயிருந்த அவள் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து, எதிர்பாராமல் என்னைக் கண்டதும், பல்லெல்லாம் தெரிய முகம் மலர்ந்து நின்றாள். சந்திரனுடைய தாய், அவளைப் பார்த்து, "கற்பகம்! கைகால் அலம்பத் தண்ணீர் மொண்டு கொடு" என்று சொல்லிக்கொண்டே எனக்காக ஒரு பாய் எடுத்து விரித்தார்.
கற்பகத்தின் கையில் இருந்து செம்பை வாங்கி முகம் அலம்பினேன். சந்திரன் அலம்பிக் கொண்டதும் கூடத்துக் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். நான் பாயில் உட்காரச் சென்றேன். "வேலு! அது யாராவது பெரியவர்களுக்கு, நமக்கு இதோ கட்டில்" என்று அழைத்தான்.
சந்திரனுடைய தாய், பழங்காலத்து வெண்கலச்செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து என் கையில் கொடுத்து, "மோர் கொண்டு வரட்டுமா?" என்றார்.
"அம்மா அம்மா! வேண்டாம்’மா என்றான் சந்திரன். "மோரும் இதுவும் அதுவும் கொடுத்து இவனுடைய உடம்பைக் கெடுத்துவிடாதே. இந்த உடம்பு தொட்டாற் சுருங்கி போல. இவனுடைய அம்மா என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லியனுப்பினார். அப்புறம் ஏதாவது வந்தால் நான்தான் பழிக்கு ஆளாவேன்" என்றான்.
எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பேசாமல் இருந்தேன்.
"தண்ணீரா? வெந்நீரா?" என்று சந்திரன் தன் தாயைக் கேட்டுவிட்டு, என் கையில் இருந்த செம்பை தொட்டுப் பார்த்தான். உடனே அதை வாங்கிக்கொண்டு, "இவனுக்கு இப்படித் தண்ணீர் கொடுக்கவே வேண்டா" என்று எழுந்து போனான். சிறிது நேரத்தில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து, "எங்கள் ஊரில் இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் காப்பாற்ற வேண்டுமே" என்றான்.
தெற்குப் பார்த்த வீடு அது. நான்கு பக்கமும் தாழ்வாரம் இறக்கி, வடக்குப் பக்கத்தில் பெரிய