அதை மறந்து, ‘வாத்தியார் வீடு’ என்றும் ‘டிராக்டர்காரர் வீடு’ என்றும் பல கெளரவப் பட்டங்களை வழங்கும் போது, சுயம்பு, அழுகிப்போன பூக்களைக் கிளறுவது கண்டு அந்த மொட்டைத் தலைவர் கோபப்படப் போனபோது, ‘பிள்ளைத்தாய்ச்சி’ கேட்டாள்.
“யாரு நீங்க... என்ன வேணும்.”
“என் பேரு சுயம்பு. எங்க அக்கா பேரு மரகதம். நல்லாம்பட்டி பிள்ளையாரு எங்கப்பா.”
வாயும் வயிறுமான அந்தப் பெண் ‘வாங்க, உள்ள வாங்க’ என்று கூவியபடியே எழுந்தாள். வீட்டுக்குள் எட்டிப் பார்த்து “எம்மா, எம்மா” என்றாள். பிறகு அவளே உள்ளே போய் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு, அதை ஒரு முந்தானையால் துடைத்து விட்டாள். உடனே அவன், மூன்று படிகளில் முதல் படி வழியாய் ஏறாமல் எகிறிக் குதித்து, அவள் போட்ட நாற்காலியில் உட்கார்ந்தான். இதற்குள் ஒரு வயதான அம்மாள், உள்ளறையிலிருந்து வெளிப்பட்டாள். ஒரு காலத்தில் போடப்பட்ட பாம்படக் காதை அறுத்து, கம்மலைப் போட்டிருக்கலாம் என்பதை அவள் காதுகளின் சிதைந்துபோன அடிவாரங்கள் காட்டின. எல்லோருக்கும் திருப்தி. தம்பிக்காரனே இவ்வளவு அழகு என்றால், அக்காவைப் பற்றிக் கேட்க வேண்டாம். ஆனால் இவனுக்கே ஒரு தடிமாடு வயசு இருக்கும். பொண்ணுக்கு எவ்வளவோ. கிழவிக்கா தாலி போடறது. மொட்டைத் தலைவர் சந்தேகம் கேட்டார்.
“தம்பிக்கு என்ன வயசு?”
“எங்க அக்காவுக்கு நாலு வயசு கீழ.”
“சரிப்பா... குத்து மதிப்பா எவ்வளவு தேறும்.”
“இருபத்தொன்னு முடிஞ்சு இருபத்திரண்டு பிறக்கப் போவுது... நெக்ஸ்ட் மன்ந்த் செவன்த் சிஸ்டர் பெர்த்டே...”
“மாமாவுக்கு நீ கடைசியில சொல்ற எந்த எழவும் புரியல. ஆனாலும் பரவாயில்லை. ஆனால், பேசும்போது உடம்பை இப்படி ஏன் வளைக்கே...”