அம்மாக்காரி, பிள்ளைத்தாய்ச்சி மகளின் தலையை வருடிக் கொடுத்தபடி, சின்ன மகளின் பெருமையை, பெருமை பிடிபடாமல் சொன்னாள்.
“எங்க இந்திரா இருக்கிற எடமே தெரியாது... அவ்வளவு அடக்கம். நீங்க நெனெச்சிக் கூடப் பார்க்க முடியாது.”
“ஆமா. ஆமா. நீங்க சொல்றபடி நெனச்சு பார்க்க முடியாதுதான்...!”
இந்திரா நகத்தைக் கடித்தபோது, ‘பிள்ளைத்தாய்ச்சி’ சுயம்புவுடன் பேச்சுக் கொடுத்தாள்.
“மாப்பிள்ளை பிடிச்சிருக்குதா.”
“என்ன கேள்வி கேட்டுட்டீங்க... எனக்கே மச்சானைக் கட்டிக்கலாம் போலத் தோணுது.”
எல்லோரும், வயிறு குலுங்கச் சிரித்தார்கள். அதனால் அடிவயிற்றில் வலி எடுத்த பிள்ளைத்தாய்ச்சி, சிரிப்பை அடக்கிக்கொள்ளப் பல்லை மூட வேண்டியதாயிற்று. சுயம்பு பொதுப்படையாய்க் கேட்டான்.
“ஆமா. கல்யாணத்தை எதுக்காக மூணு மாசம் தள்ளிப் போடுறீங்க...”
பிள்ளைத்தாய்ச்சி, புருஷனை குறும்புத்தனமாய்ப் பார்த்து, ‘பதில் சொல்லுங்க’ என்பது மாதிரி எவருக்கும் தெரியாமல் பொய்க் கோபத்தோடு அழகு காட்டியபோது, வாத்தி மச்சான் விளக்கமளித்தான்.
“லிஸ்டருக்கு இது மாசம்... அவளால கலியாணத்துக்கு வர முடியாது. அதனால குழந்தை பிறந்த ரெண்டாவது மாசத்துல கலியாணத்தை நடத்தலாமுன்னுட்டு பெரியவங்க நிச்சயம் செய்திருக்காங்க. வேற காரணம் எதுவும் கிடையாது...”
வாத்தியார் சொல்லிவிட்டு திடுக்கிட்டுச் சிரித்தான். எல்லோரும் வினாவாக முகத்தைக்