Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 11 - சு. சமுத்திரம்
வாடா மல்லி, அத்தியாயம் - 11
அந்தப் பல்கலைக் கழக வளாகத்தில், அகில உலகின் ஒட்டு மொத்தமான தலைவிதியை நிர்ணயிக்கப்போவது மாதிரியான வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தது. விருந்தினர் மாளிகையில் ஒரு வி.ஐ.பி. அறையில், ஒரு வாக்குப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. சிலர் எடுத்து எடுத்துக் கொடுக்க, பலர் மடித்து மடித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பேப்பரிலும் பதினைந்து மாணவ வேட்பாளர்கள். இவர்களில் இருவர் பெண்கள்.
அந்த விருந்தினர் விடுதிக்கு, வெளியே ஆட்டோக்களும் டாக்ஸிகளும் தூள் பரப்பின. ஒவ்வொன்றிலும் ஏழெட்டு மாணவ வாக்காளர்கள். சில மோட்டார் பைக்குகளும் ஸ்கூட்டர்களும் வாக்காளர்களை இறக்கி விட்டு அவர்கள் வாக்குச் சாவடிக்குள் போனதும் கொடுத்த வாக்கை அங்கேயே மறப்பது போல், மாயமாய் மறைந்தன. சைக்கிள்களில் ஏறச் சொன்னால் எல்லோருக்குமே தயக்கம். கொண்டு வந்துவிட்ட வாகனங்கள் மீண்டும் வரும் என்று வாக்களித்தவர்கள் காத்திருந்த நேரத்தில் தங்களது அறைகளுக்கு மூன்று தடவை போய் விட்டு வந்திருக்கலாம்.
ஒரு வகையில் இது வரலாறு காணாத தேர்தல்தான். பொறியியல் கல்லூரி யூனியன் தேர்தலில், முதலாண்டு மூர்த்தியும், நான்காவது ஆண்டு செல்லமுத்துவும் செயலாளருக்குப் போட்டியிடுகிறார்கள். பொன்முகன், தலைவர் பதவிக்கும், அவன் படிக்கும் இறுதி வகுப்பிலேயே படிக்கும் ஏகாம்பரம் அதே பதவிக்கும் போட்டியிடு கிறார்கள். இது தவிர, இன்னும் சில ஜாயிண்ட், உதவிச் செயலாளர்கள், பொருளாளர்கள் பதவிகளுக்கும் பல போட்டிகள். ரேக்கிங் செய்யப்பட்ட அனைத்து மாணவ மாணவிகளும் ஒன்று சேர்ந்து மூர்த்திக்கும் செல்லமுத்துவுக்கும் வாக்களிக்கிறார்கள் என்ற நிலமை. செல்லமுத்து ஃபைனல் ஆண்டு என்றாலும், ஃபைனான பையன். ரேக்கிங் செய்தவர்களைத் தடுத்தவன். ஆகையால் அது ஒன்றே, அவனுக்கு மூல பலமாக இருந்தது. பொன்முகனுக்கு, முழுப்பயம் பிடித்தது.
எங்கு பார்த்தாலும், போஸ்டர் மயங்கள். மாயங்கள், அத்தனையிலும் பொன்முகத்தின் திருமுகம் பெரிதாகவும், அவனது செட்டின் படங்கள் சிறிதாகவும் இருந்தன. ஏகாம்பரம் கோஷ்டியும் சுவரொட்டிகள் அடித்திருந்தார்கள். சில மின்சாரக் கம்பங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் தூக்கு போடப்பட்டவை போல் தொங்கின. இன்னும் சில போஸ்டர்கள் எந்த