இப்போது, பதிவாளர், பிரமிளாவைச் சிறிது பயத்தோடு பார்த்தார். அப்படி பயம் ஏற ஏற, சுயம்புவைப் பயமுறுத்துவது போல் பார்த்தார். பொன்முகன், டீப்பாயைத் தட்டித் தட்டிப் பேசினான்.
“இன்னிக்கு மொலஸ்ட் செய்தான். நாளைக்கு ரேப் செய்வான். ஒங்க டாட்டர்கூட இங்கதான் ஸார் படிக்காங்க.”
பதிவாளருக்குச் சுருக்கென்றது. ‘சீக்கிரம் முடிக்கணும். இல்லாட்டி இந்தப் பொன்முகன், அம்மா, பாட்டி எல்லோரையும் இழுப்பான்!’
“யாரும் சம்பந்தம் இல்லாத விஷயம் பேசப்படாது. மை டியர் யங்மேன். எதுக்காக அப்பா இப்படி நடந்துக் கிட்டே. படிக்க வந்தியா இல்ல பிடிக்க வந்தியா...”
சுயம்பு, பதிவாளரையே பார்த்தான். என்னத்தை சொல்வது, எப்படிச் சொல்வது? டேவிட்... டேவிட்... நீங்க எங்க போயிட்டீங்க டேவிட்... நீங்கதான் என்னைக் காப்பாத்தனும்! உடனே வாங்க டேவிட்...
“மை யங்மேன். விவகாரம் போலீஸ் கேஸாகாமல் இருக்கதுக்காவது நீ ஏன் இந்த இன்னோசண்ட் சைல்டை மொல்ஸ்ட் செய்தேன்னு சொல்றியாப்பா...”
குட்டையும் தட்டையுமான பதிவாளரைப் பார்த்து, சுயம்பு அழுதான். மூர்த்தியும் முத்துவும் அவனை உலுக்கினார்கள். வாயை மூடினார்கள். இன்ஸ்பெக்டருக்கும் பதி வாளருக்கும் பரிவுணர்வு ஏற்படுவதை யூகித்துக் கொண்ட பொன்முகன், மேடைப் பேச்சாளியானான்.
“இவன் சும்மா நடிக்கான் சார்... போனவாரம் ஒரு மெடிகல் கேர்ல் கிட்டவும் முறைகேடா நடந்தான் சார். இவனால ஒரு பெரிய சண்டையே வர இருந்தது சார். இவனால எங்க பொறியியல் மாணவர் சமுதாயத்துக்கே அவமானம் சார்.”
“அப்படியா மை யங்கமேன்...”