“இப்படிக் குத்துக்கல்லா நின்னால் எப்படி? பிள்ளை துடியாத் துடிக்கான். தவியாய்த் தவிக்கான். ஒரு நட நடந்து. பூவம்மா மயினி வீட்டுக்குப் போய், வரச் சொல்லுறது... பிள்ளைய விடவா கெளரவம் வந்துட்டு. ஆனாலும் இந்த வீறாப்பு ஆகாதுப்பா... வேற யாரு போனாலும் மயினி வரமாட்டாள். அவள் வராமல் இந்த சீதாலட்சுமி போகமாட்டாள்! அப்புறம் அவரவர் இஷ்டம்...”
பிள்ளையார், இஷ்டத்துக்கு விரோதமான ஒரு காரியத்தைச் செய்தது போன்ற பெருமூச்சோடு விவரம் சொன்னார்.
“இப்பதான் வழியில் அவளப் பார்த்தேன். வீட்டுக்கு வாக்கான்னேன்... கூடவே புறப்பட்டாள்... நான்தான், திருநீறு எடுத்துட்டு வான்னு சொன்னேன். வழியிலதான் பார்த்தேன்... படியேறிப் பார்க்கல...”
“கீழ விழுந்தாலும், மீசையில மண் படலியாம்...”
“எல்லாம் இந்தப் பன்னாடைப் பயலால. பேசக் கூடாத ஒடுகாலிகிட்ட, நான் வருஷக் கணக்குல வச்சிருந்த வீம்ப விட்டுக் கொடுக்க வேண்டியதாப் போச்சு...”
“பாத்தியாளா மரகதம்... ஒப்பன் பார்க்கதுக்கும் பேசறதுக்கும் ‘பேயன்’ மாதிரி தெரிஞ்சாலும், அவரு மனசு தேவதை மாதிரின்னு நான் அடிக்கடி சொல்றத ருசுப்படுத்திட்டாரு பாரு. இந்த மாதிரி என் அண்ணன் மகனுக்கும் விட்டுக் கொடுத்திருந்தா...”
“ஏழா மரகதம்... ஒம்மா ஏன் இப்படி வாயக் கிழிக்கான்னு கேளு...”
“என்னம்மா நீ... தம்பி இந்த நிலயில இருக்கும் போது, ஒனக்கு எப்படித்தான் பேச வருதோ...”
“போடி புண்ணாக்கு. பூவம்மா மயினி தீர்த்து வச்சுடுவாள்! அதனாலதான், கவலையில்லை. அதோ மயினியே வந்துட்டாக, நமக்கு நல்லகாலம் பொறந்துட்டு. மரகதம், ஒப்பாவ மயினிகிட்ட ரெண்டு வார்த்தை பேசச் சொல்லு... வாய் அழுவிடாது...”