திருநீறு இட்டு, குங்குமம் போட்டு, வாயைத் திறக்கச் சொல்லி, அதில் மூன்று தடவை கையை உள்ளே விட்டு, வெளியே எடுத்தாள். ஒரு பெரிய பிரச்னையைத் தீர்த்து விட்ட பெரு மிதத்தில் பேசினாள்.
“கலங்காதே பிள்ளையார்... எம் மருமவனுக்குப் பிடிச்ச பீடை இன்னியோட முடிஞ்சிட்டு... சந்தையில போயி நல்ல சேலையா வாங்கு... சீதாலட்சுமி கொஞ்சம் நாகரீகமானவள் பாரு... வளையலும் ரப்பரா இருக்கட்டும்...!
வெள்ளையம்மா, ஒரு சந்தேகம் கேட்டாள்.
“டேவிட்டுன்னா யாரு? அந்தப் பேரையே இந்த சீதாலட்சுமி சொல்றாளே! ஒருவேள கலியாணத்துக்கு முன்னால அவன வச்சுக்கிட்டு இருந்திருப்பாளோ...”
“எக்கா... இந்த மூளியை வாய மூடச் சொல்லுக்கா. யாரையும் பழி சொல்லணுமுன்னால் கூசாம சொல்லுவா!”
பூவம்மா, வெள்ளைக் கொடி பிடித்தாள்.
“ஊர்க்கதை நமக்கெதுக்கு வெள்ளையம்மா... நம்ம வரைக்கும்தான் நாம் பார்க்கணும். சீதாலட்சுமி கேட்டது எல்லாத்தையும் என் மருமவன் கையில கொடுங்க. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை உச்சிப் பகலுல என் மருமவன் யாருக்கும் தெரியாம போயி சீதாலட்சுமி சமாதியில சேலை, துணிமணி, வளையலு, எல்லாத்தையும் வச்சுட்டு திரும்பிப் பார்க்காமலே வந்துடணும்! இதுக்கும் மீறி சீதாலட்சுமி, கட்டுப்படலன்னா இருக்கவே இருக்கு. பாதாளச் சிறை!”
-----------------
தொடரும்...