சுயம்பு, அக்காவின் தலையைத் தொட்டான். உடனே அவள், அவனை லேசாய் தள்ளிவிட்டுக் கொண்டு, தலையைச் சுவரில் வைத்துத் தேய்த்துக்கொண்டே இருந்தாள். சுயம்பு அக்காவைப் பலமாகத் திருப்பி விட்டான். அவள் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பது போல், அவள் பக்கமாகக் கைகளை நீட்டினான். அவள் கையை எடுத்து இடுப்புச் சேலையின் பக்கம் கொண்டு வந்தான். வீறாப்பு இல்லாமல் குழைந்து நின்றான். கண்கள் எரிகின்ற மெழுகுவர்த்திகளாய் உருகிக்கொண்டிருந்தன. மரகதம், தம்பியை அப்படியே கட்டிப் பிடித்து மீண்டும் அழுதாள். இதற்குள் அவனே புடவையை அவிழ்த்து, கீழே போட்டுவிட்டான். அவள் காலடியிலேயே போட்டான். அக்காள் கீழே கிடந்த லுங்கியைக் கையில் வைத்துக்கொண்டு ‘நீயே பாவாடையைக் கழட்டு’ என்று உதடு துடிக்கச் சொன்னாள். அவன், பாவாடைக்கு மேல் லுங்கியைக் கட்டிக்கொண்டு அதை அவிழ்த்துப் போட்டான். மரகதம் சிறிது துக்கம் குறைந்து கேட்டாள்.
“குங்குமத்தையும் அழிச்சுடுடா...”
“டேவிட் இருக்கற வரைக்கும் அது இருக்கும்...”
மரகதத்திற்கு, ஒன்றும் புரியவில்லை. பழைய தம்பியை, புதுப்புது வகை வகையாய் பார்ப்பது போல், பார்த்தாள். உருட்டுக்கட்டை உடம்பு. இப்போது முன் பக்கமாய், சரிந்து, ஒடுங்கியிருந்தது. எங்கோ பார்க்கும் பார்வை! எதையோ தேடும் உளைச்சல்! அவளால் இன்னும் தாள முடியவில்லை. அவனை அப்படியே அனைத்துக்கொண்டாள். “தம்பி... தம்பியே...” என்று புலம்பியபடியே நெஞ்சில் ஏதோ குத்துவதைப் பார்த்து அழுத்தமாய்ப் பார்த்தாள். அவன் கழுத்தில் காசு மாலையும், நெக்லஸும் கிடந்தன. அவற்றையும் வளையல்களையும் அவளே கழற்றி, பீரோ மேலிருந்த அட்டைப் பெட்டிக்குள் வைத்தாள். கண்களை விட்டுவிட்டு, இப்போது காதுகளைத் தடவிவிட்ட வெள்ளையம்மா, இன்னும் எழுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் கிடந்தாள். அவள் முகத்தில் ஒரு சின்னத் தெளிவு. மகன் சேலை கட்டுவதற்கான காரணத்தை உறுதிப்படுத்திய அந்தக் கண்டுபிடிப்பு சாதகமாக இல்லாததால் சலிப்போடு சொன்னாள்:
“எல்லாம் அந்த சீதாலட்சுமியோட வேலைதான். இவனும், அவளமாதிரியே முழிக்கான் பாரு...