வைத்துவிட்டான்.
வாசல்பக்கம் இன்னொரு காலடிச் சத்தமும் கேட்டது.
வெளியூரில் துஷ்டி கேட்டுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய வெள்ளையம்மா, தனது சொந்த வீட்டிலும் ஒரு துஷ்டி விழுந்ததுபோல் உள்ளே ஓடினாள்.
சுயம்புவைச் சுற்றிச் சுற்றி வந்த மரகதத்திற்கு அம்மா வந்ததில் சிறிது தைரியமும் நிதானமும் வந்தன. ஆனாலும், பதட்டம் குறையாமலே, “எம்மா, எம்மா. மொதல்ல கதவைச் சாத்தம்மா... யாருக்காவது தெரிஞ்சுடப் போவுதும்மா” என்று கத்தினாள்.
அப்படியும், வெள்ளையம்மா கதவைச் சாத்தாமல் மகனையே வாயகலப் பார்த்துவிட்டு, பிறகு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு தரையில் புரளப் போனாள். மரகதம் அவளைத் தடுத்து, ஒரு கைக்குள் அடக்கிக்கொண்டு, அவளையும் சேர்த்து, இழுத்து இழுத்து, மறுகையால் கதவைத் தாழிட்டாள்.
தாயும், மகளும், சுயம்புவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். மரகதம் தம்பியின் தாறுமாறான புடவையைக் களைவதற்காக, அவன் தோளில் தொங்கிய புடவை நுனியைத் தொடப்போனபோது, சுயம்பு அவள் கைக்குக் கீழாக குனிந்து தலையைப் பின்வாங்கி, சிறிது விலகி நின்றான். மரகதம், இரு கரங்களையும் இயலாமையைக் காட்டுவதுபோல் ஆகாயத்தைப் பார்த்து ஆட்டி விட்டுக் கெஞ்சினாள்.
“தம்பி... தம்பி... நீ செய்யுறது உனக்கே நல்லா இருக்காடா...”
“தம்பில்ல.தங்கச்சின்னு சொல்லுக்கா...”
“ஏய் மரகதம்... சித்தம் குழம்பிப்போய் நிக்கவன் கிட்ட என்ன பேச்சு... சுயம்பு, அம்மா சொல்லுவதைக் கேளுடா... உனக்கே இது அடுக்குமாடா... அப்பாவுக்குத் தெரிஞ்சா...”
சுயம்பு கதவைத் திறந்து அம்மாவுக்கு வழி காட்டப் போனபோது, மரகதம் அவனை மடக்கினாள். “வாம்மா, வந்து பிடிம்மா” என்று சொல்லிக்கொண்டு, அவன் இடுப்போடு சேர்த்து,