சொல்லிட்டேன். ஒங்கம்மாவோட, துஷ்டிக்குப்போன எங்கம்மா வர்றதுக்கு, சாயங்காலம் ஆகும்னு சொல்லிட்டாள். மோகனா, இப்போ வர மாட்டாள். அந்தச் சேதி ஒங்களுக்குத் தெரியவேண்டாம். அப்படியே அவள் வந்தாலும் கவலையில்லை. என் மனசு அவளுக்கு நல்லாவே தெரியும்.”
“அடி என் ராசாத்தி. எனக்கு ஒண்ணுதான் புரிய மாட்டேங்கு...”
“என்னவாம்?”
“சேலை எப்படிக் கட்டணும்னு தெரியலை. கொஞ்சம் எழுந்து ஒன் சேலையைக் கழட்டி, பழையபடி கட்டு பார்க்கலாம். நாம ஒண்னுக்குள்ளே ஒண்னு. அப்புறம் ஏண்டி வெட்கம்...”
“எப்பாடி, விட்டால் அதுக்கு மேலயும் போவீங்க போலிருக்கே... எனக்குப் பயமா இருக்கு. ‘அதை’ கலியாணத்துக்கு ரிசர்வ் பண்ணிக்குவோம். நான் வாறேன்... இதுக்குமேல இருந்தால், ஒங்க ஆசையை என்னாலயும் தடுக்க முடியாமப் போயிடும்.”
“எதுக்கும் அந்த சேலைய...”
“ச்சீ... பேச்சப் பாரு. நான் வாறேன்...”
மலர்க்கொடி, வெளியே போனாள். ஜாக்கெட்டுக்குள் வலது கையை விட்டுத் துழாவி, நான்காய் மடிக்கப்பட்ட ஒரு காகிதத்தை வெளியே எடுத்து முத்தம் கொடுத்தாள். இந்த காகித முத்தத்திற்குப் பிறகு, மீண்டும் அந்த அறைக்குள் ஓடிவந்து, முத்தமிடப்பட்டதை, அவன் மடியில் போட்டுவிட்டு ஓடினாள். பிறகு நாணத்தோடு திரும்பி வந்து “பதில் எழுதி வையுங்க. நாளைக்கு வந்து வாங்கிக்கறேன்” என்று அதே நாணத்தோடு சொல்லிவிட்டு, அந்த நாணத்தையும், அவனிடமே விட்டுவிட்டு ஓடுவதுபோல் ஓடினாள்.
சுயம்பு, கடிதத்தைப் பிரித்துப் படித்தான்.
என் அன்பிற்குரிய ...... சுயம்பு...