“அண்ணி இல்லியா?”
“என்னடி இது... ஒன் வீட்டுக்குத்தானே வந்திருக்காள்...”
“சின்ன அண்ணியைக் கேட்டேன்!”
“உனக்கு அவள் மூத்தவள்தானே.”
“தெரியாதா... நான் சின்னவள்.”
“ஆமாமா. நீ அம்மணமா திரிஞ்சபோது, அவள் ஜட்டி போட்டிருந்தாள். இப்போகூட ஞாபகம் வருது:”
மலர்க்கொடிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. வெளியேறப் போனவளை சுயம்பு அவள் கையைப் பிடித்திழுத்து, கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, அவனும் உட்கார்ந்தான். அவள் தலையை ஆச்சரியமாகப் பார்த்தான். முன் நெற்றியில் ஐந்தாறு முடிக்கற்றைகள். நெற்றிக்குப் பாதிவரை தொங்கின. நேர்வகிடு எடுத்தவளின் தலையில், அந்த முடிக்கற்றை வேர்ப்பிடித்த இடத்தில் ஒரு குறுக்கல் வகிடு. அவனுக்கு ஆச்சரியம். இது எப்படி முடியும்...?
“ஏய் மலரு. இந்த வகிடு எப்படிம்மா வரும்...?”
“அது கிடக்கட்டும். ஒங்களை எதுக்காக காலேஜ விட்டு நீக்கினாங்க?”
“இந்த சந்தோஷமான, சமயத்துல பழைய குப்பை எதுக்கு மலரு... ஒன்னைப் பார்த்ததும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா? இப்படி சந்தோஷப் படுறது இந்த ஒரு மாசத்துல இதுதான் மொதல் தடவை. அப்புறம் இந்த வகிடு...”
“இப்பவாவது என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்களே. நான் ஒங்களைப் பார்க்கத்தான் வந்தேன். மரகத அண்ணி கிட்ட, நான் வாரது வரைக்கும் எங்க வீட்டைவிட்டு புறப்படக் கூடாதுன்னு