“சம்மணம் போட்டு நல்லா உட்காருங்க, என் மருமவனே. இன்னையோட ஒங்களப் பிடிச்ச பீடை கழிஞ்சுட்டுதுன்னு நினைச்சுக்கோ! எப்பா. பிள்ளையாரு தம்பி, வேற எதுவும் வேண்டாம். ஒரு கட்டிக் கற்பூரம் வாங்கிட்டு வா. முடியுமுன்னால். ரெண்டு வாழைப்பழம். ஊதுபத்தி.”
பிள்ளையார் ஓடினார். அவர், தலை மறைந்ததும் வெள்ளையம்மா, மயினிடம் புலம்பினாள்.
“வெளியில சொன்னா வெட்கக்கேடு மயினி. சேலையும், ஜாக்கெட்டையும் போட்டுக்கிட்டு குதிக்கான். ஏய் மரகதம். நீ ஏன் இப்படி கையை ஆட்டுறே. மயினியை பத்தி ஒனக்கு என்ன தெரியும். அவியிள உங்கப்பா உள்பட எல்லோரும் விலக்கி வச்சபோதுகூட, தனியே நின்னவிய. அந்த மாரியம்மாவே கதின்னு மயினி அப்போ நட்ட வேப்பஞ்செடி இப்போ இவ்வளவு குத்து வேப்பிலையைக் கொடுத்து மரமா நிக்கிது. மயினி கட்டுன மாரியாத்தா கோயிலுக்கு அதே வேப்பமரம் விசிறி வீசுது... மயினி... மயினி... எந்த ரகசியத்தையும் கழுத்த அறுத்தாக்கூட சொல்லமாட்டாக!”
“அதைவிடு வெள்ளையம்மா. சேலை கட்டுறது பெரிய விஷயமாச்சே...”
“நீங்களே இப்படி பயப்படலாமா மயினி. எல்லாம் அந்தச் செத்துப்போன சீதாலட்சுமியோட வேலை...”
பூவம்மா மயினிக்குச் சொல்லிக் கொடுத்தது மாதிரி ஆகிவிட்டது. இடது கையில் வைத்திருந்த வேப்பிலைக் கொத்தை, வலது கைக் கொத்தோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு, சுயம்புவின் முகத்திற்கு முன்னால், மேலும் கீழுமாய் ஆட்டினாள். அந்த முகத்தை, அந்த இலைகள் வருடிக் கொடுத்தன. உடனே அவள் கண்களை மூடிக் கொண்டு மாரியம்மாவைப் பற்றிய பாட்டைப் பாடிக் கொண்டே, வேப்பிலைக் கொத்தை பலமாக ஆட்டினாள். பிறகு ஆவேசப்பட்டு அதே கொத்தைச் சுயம்புவின் தலையில் கொத்தவிட்டாள். தலையைப் பிடித்து வேப்பிலைக் கொத்தாலேயே அடித்தாள். பிறகு இடுப்பில் காசுப் பை போல் சொருகியிருந்த விபூதிப் பையை எடுத்து உள்ளங்கையில் ஒரு கவளம் திருநீறை வைத்துக் கொண்டாள். வாயைக் கையின் அடியில் வைத்தபடியே அந்தத் திருநீறை எடுத்து அவன் முகத்துப் பக்கம் மூன்று தடவை ஊதினாள். பிறகு, அவன் தலையை ஓங்கி ஓங்கி அடித்தாள். அவன் வலி பொறுக்க முடியாமல் இரண்டு கைகளாலும் தலையை மறைத்தபோது, வெள்ளையம்மாள் அவற்றைத்