(Reading time: 13 - 26 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

இது பற்றிப் பேசுகிற பொறுப்பைக் கூட வேணு மாமா சொல்லியது போல் வசந்தியின் வசம் விட்டுவிடலாம் என்று தந்தை, மகன் இருவருமே கருதினார்கள். அன்றிரவு கமலியிடம் மட்டும் குறிப்பாக இந்த விஷயத்தைப் புலப்படுத்தினான் ரவி.

   

மறுநாள் காலை முதல் தபாலில் கிடைத்த ஒரு கடிதம் அவர்கள் ஏற்பாட்டில் சிறு மாறுதல் ஒன்றை உண்டாக்கியது. சர்மாவுக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தவர்கள் அதன் நகல்களை ஸ்ரீ மடம் ஹெட் ஆபீஸ் மானேஜருக்கு அனுப்பியிருந்ததுடன், சர்மாவையும் ரவியையும் இல்லாததும் பொல்லாததுமாகக் குறை சொல்லி சில மொட்டைக் கடிதங்களும் கூடப் போட்டிருந்தார்கள் போலிருக்கிறது.

   

ஸ்ரீ மடம் மானேஜர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை, என்றாலும் ரவியையும், அவனோடு வந்திருக்கும் பிரெஞ்சுப் பெண்மணியையும் ஸ்ரீ மடத்துக்கு வரச் சொல்லி, பெரியவர்களைத் தரிசனம் செய்து விட்டுப் போகுமாறு யோசனை கூறியிருந்தார். எழுதியிருந்த பாணியிலிருந்து அந்தத் தரிசனமே இவர்களுக்கு ஒரு சோதனையாகவோ பரீட்சையாகவோ அமையும் போலிருந்தது. பெரியவர்களின் குறிப்பறிந்து அந்த மகா ஞானியின் சமிக்ஞையோ ஆக்ஞையோ பெற்றுத்தான் அந்தக் கடிதமே மானேஜரால் எழுதப்பட்டிருக்குமென்று சர்மாவால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது.

   

கடிதத்தை ரவியிடம் படிக்க கொடுத்து, "அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு நடை போய்விட்டு வா! பெரியவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்" - என்றார் சர்மா. ரவி அதற்கு உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் சிறிது தயக்கத்தோடு தந்தையைக் கேட்டான்.

   

"இந்த ஊர்க்காரா ஒரு வண்டி குத்தம் சுமத்திக் கோள் சொல்லி எழுதின கடிதாசையும், வக்கீல் நோட்டிஸையும் பார்த்துட்டு மடத்திலேருந்து இதை எழுதியிருக்கா. என்ன நடக்குமோ? வரச் சொல்றது அவா. போகச் சொல்றது நீங்க. மகாஞானியும் பூர்ண திருஷ்டியும் உள்ள ஒருத்தரைத் தரிசிக்கப் போறதை எங்க பாக்கியம்னு நெனைச்சு நானும் கமலியும் போறோம். இதிலே வேற ஒண்ணும் சிரமமோ கஷ்டமோ வராதே?"

   

"ஒரு கொறையும் வராதுடா! போய் அவா அநுக்கிரகத்தையும் வாங்கிண்டு வந்து சேருங்கோ..."

   

யோசிக்கவோ, பிரயாணத்துக்குத் திட்டமிட்டுத் தயாராகவோ கூட அவர்களுக்கு நேரமில்லை. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.