ஞானத்தின் நிறைவும் கனிவும் தெரிந்தன. முதலில் சமஸ்கிருத ஸ்லோகத்தையும் அப்புறம் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் அவள் படித்தாள். அவர்களுக்கிடையே ஒரு பவ்யமான சாட்சியைப் போல் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரவி.
அங்கே படித்துறைக்கு மேலே பக்தர்களின் கூட்டம் கூடி விட்டது. ஓர் ஐரோப்பியப் பெண்மணி ஸ்பஷ்டமான - குறையில்லாத உச்சரிப்போடு ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தைச் சொல்லி, அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் கூறுவதைக் கூட்டத்தினர் நிசப்தமாகக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு அது ஒரு புதிய மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவமாயிருந்தது.
சிற்சில இடங்களில் சைகையாலேயே 'மறுமுறையும் படி' - என்று தெரிவித்துக் கமலியைத் திரும்பக் கூறச் செய்து கேட்டார் அவர். எப்போது நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டுகிறாரோ அப்போது நிறுத்திவிடலாம் என்று படித்துக் கொண்டிருந்தவளை - அவர் நிறுத்தச் சொல்லாமலே சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் போவதை யாருமே உணரவில்லை. ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் முடிந்து அவள் தாள்களை மூடியதும், "வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு வேலை நடக்கிறதா?"... என்று எண்ணி அதையும் சைகை மூலமே அவர் கேட்டபோது, கமலி அதைப் புரிந்து கொண்டு "பஜ கோவிந்தம் பண்ண முயன்று கொண்டிருக்கிறேன்" என்றாள். வாயருகே வலது கையை அடக்கமாகப் பொத்தி அவள் பதில் கூறிய பாணியின் இந்தியத் தன்மையை அனைவரும் வியந்து கொண்டிருக்கும் போதே, "பஜ கோவிந்தத்தைப் பிரெஞ்சு மொழியில் பண்ணத் தொடங்கியிருந்தால் அதிலிருந்தும் ஒன்று சொல்லேன்" - என்பது போல் சைகை செய்தார் அவர்.
"புனரபி ஜனனம், புனரபி மரணம்... புனரபி ஜனனி ஜடரே சயனம்..." - என்ற பகுதியைச் சொல்லிவிட்டு அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பைக் கூறினாள் கமலி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் நினைத்தது - அந்த நினைப்பின் சைகையிலேயே அவளுக்குத் தவறாமல் புரிந்ததுதான். 'மகான்கள் பேசாமலே தங்களுடைய நினைப்பைப் பிறருடைய இதயத்தில் தெளிவாக்கி விடுவார்கள். வாயும் செவியும் பாமரர்களுக்குத் தான். அப்படிக் கேட்கவும் பேசவும் செய்யும் கருவிகள் இல்லாமலே கேட்பிக்கவும், பேசுவிக்கவும் செய்ய மகான்களால் முடியும்' என்பதை அவருடைய அந்த நிலைமை அவர்களுக்கு