டூரிஸ்ட் கோச்கள், பத்துப் பன்னிரண்டு கார்கள், சில குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அவர் தங்கியிருப்பதை ஒட்டி அந்த இடம் ஒரு க்ஷேத்திரமாகி இருந்தது. அந்தப் பெரிய மாந்தோப்பில் நடுவாக இருந்த ஒரு தாமரைப் பொய்கையின் கரையில் சிறு குடிசை போன்ற பர்ணசாலை ஒன்றில் அவர் தங்கியிருந்தார். கோயில் கர்ப்பக்கிருஹத்தில் இருப்பது போல் அந்த இடத்தைச் சுற்றித் துளசியும், கர்ப்பூரமும் சந்தனமும் - நெய்யும் கலந்த வாசனை நிலவியது. ஆணும் பெண்ணுமாக நிறைய பக்தர்கள் கையில் பழத் தட்டுக்களுடன் தரிசனத்துக்குக் காத்திருந்தனர். ரவி கமலியோடு ஸ்ரீ மடத்து நிர்வாகியைப் போய் பார்த்தான். அவர் பிரியமாக வரவேற்றுப் பேசினார். எங்கே தங்கியிருக்கிறார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் விசாரித்துக் கொண்டார். தங்கியிருக்கிற இடத்தில் எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா என்றும் கேட்டார். "நீங்கள் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரங்களிலும் இந்தியக் கலாசாரங்களிலும் நிரம்ப ஈடுபாடுள்ளவராயிருப்பதை அறிந்து பெரியவர்களுக்கு வெகு திருப்தி" என்று நடுவே கமலியைப் பார்த்துத் திடீரென்று ஒரு வாக்கியம் சொன்னார் அவர். தங்களைப் பற்றித் தாங்கள் அங்கே வருவதற்கு முன்பே நிறையப் பேச்சு நடந்திருப்பதை ரவியும் கமலியும் அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பெரியவர்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பதால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்பதையும் கமலிக்கு விளக்கினார் அவர். மொட்டைக் கடிதாசுகள், வக்கீல் நோட்டீஸ்கள் பற்றி அவரும் எதுவும் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை.
அங்கே தரிசனத்துக்குக் காத்திருந்தவர்களோடு அவர்களும் போய் நின்று கொண்டார்கள். ஓர் ஐரோப்பிய யுவதி புடைவை குங்குமத் திலகத்தோடு தரிசனத்துக்கு வந்திருப்பது காத்திருந்த மற்றவர்களிடம் சிறிது வியப்பை உண்டாக்கியது. சிலர் ரவியிடம் வியந்து விசாரித்தார்கள். சிலர் கமலியிடமே ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்து அவள் தமிழிலேயே பதில் சொல்லியது கண்டு ஆச்சரியப்பட்டார்கள். கமலியைச் சுற்றி இளம் பெண்கள், மாமிகளின் கூட்டம் கூடிவிட்டது.
பெரியவர்கள் பொய்கையில் நீராடிவிட்டுப் படித்துறையிலேயே ஈர ஆடையுடன் ஜபம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படித்துறையிலிருந்து அவர் குடிலுக்கு வந்ததும் தரிசனம் கிடைக்கலாம் என்று காத்திருந்தவர்களிடையே பேச்சு நிலவியது.
கிழக்கு நன்றாக வெளுத்து மாந்தோப்பில் பறவைகளின் குரல்கள் வீச்சுக் குறையத்