உடனே கிடைத்த பகல் நேர ரயிலைப் பிடித்து விரைந்தார்கள் அவர்கள். மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குத்தான் அங்கே போய்ச் சேர முடிந்தது.
ஸ்ரீ மடத்தையும், பழம் பெருமை வாய்ந்த ஆலயங்களையும் தரிசிக்க வரும் பக்தர்களுக்காகவும், யாத்திரீகர்களுக்காகவும் அந்த ஊரில் தங்குவதற்கு சில நல்ல லாட்ஜுகளும் ஹோட்டல்களும் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி நீராடி உடைமாற்றிக் கொண்டு ரவியும் கமலியும் தயாரானார்கள். ஊருக்கு வெளியே இரண்டு மூன்று மைல் தொலைவில் ஒரு மாந்தோப்பில் ஆசார்ய சுவாமிகள் தங்கியிருப்பதாகவும் அப்போது சாதுர் மாஸ்ய விரதம் இருப்பதால் அவர் யாரோடும் பேசுவதில்லை என்றும் எல்லாம் சமிக்ஞைதான் என்றும் ஹோட்டல் மானேஜர் கூறினார். கூட்டம் சேருவதற்கு முன் சீக்கிரமே போய் விட்டால் சுலபமாக தரிசனம் ஆகும் என்று சொல்லி அவரே ரவியும் கமலியும் அந்த மாந்தோப்புக்குப் போவதற்கு ஒரு டாக்ஸியும் பேசி விட்டார்.
பழைய நாள் சுங்குடிப் புடவை போலத் தோன்றிய ஓர் எளிய கைத்தறிப் புடவை அணிந்து குங்குமத் திலகமிட்டு, நீராடிய ஈரம் புலராத கூந்தலை நுனிமுடிச்சிட்டுக் கொண்டு அதிகாலையின் புனித உணர்வுகள் நிறைந்த மனத்துடன் புறப்பட்டிருந்தாள் கமலி. நிறமும் கண்களும், கூந்தலும் வித்தியாசமாகத் தோன்றின என்பது தவிர மற்ற விதங்களில் அவள் ஓர் இந்தியப் பெண்ணாகவே காட்சியளித்தாள். சில நோட்டுப் புத்தகங்களும் டைரியும் அவள் கையில் இருந்தன.
அரையில் சரிகைக் கரையிட்ட பட்டாடையும், மேல் உத்தரியமும், பொன் நிற மார்பில் வெளேரென்று மின்னல் இழையாகத் துலங்கிய யக்ஞோபவீதமுமாகப் புறப்பட்டிருந்தான் ரவி. நடுவழியில் பழக்கடை, பூக்கடை இருந்த பகுதியில் நிறுத்தி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சைப் பழங்களும், ஒரு பச்சைத் துளசி மாலையும் வாங்கிக் கொண்டார்கள் அவர்கள்.
அதிகாலையில் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும் போது அப்படி ஒரு தரிசனத்துக்காகப் போவது மனத்துக்கு ரம்மியமாக இருந்தது. ரவி கமலி இருவருடைய மனங்களும், சரீரங்களும் அப்போதுதான் பூத்த பூக்களைப் போல் சிலிர்ப்புடனும் நறுமணத்துடன் தண்ணென்றும் களங்கமற்றும் இருந்தன. மனங்களும் உடல்களும், உஷ்ணமின்றிக் குளிர்ந்திருந்தன.
அந்த அதிகாலையிலும் கூடப் பெரியவர்கள் தங்கியிருந்த மாந்தோப்புக்கு வெளியே நாலைந்து