தொடங்கியிருந்தன. ஸ்ரீ மடம் நிர்வாகி அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தார்.
"நீங்க ரெண்டு பேரும் படித்துறைக்கே போயிடுங்கோ. பெரியவா உட்கார்ந்திருக்கிற படிக்கு ஒரு படியோ, ரெண்டு படியோ கீழே இறங்கிண்டா அங்கேயிருந்தே அவாளோட பேசச் சௌகரியமாயிருக்கும்."
அவர் கூறியபடி அவர்கள் இருவரும் படித்துறைக்கு விரைந்தனர். பொய்கையில் பூத்திருந்த பல செந்தாமரைப் பூக்களில் ஒன்று கரையேறிப் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போல் கிழக்கு நோக்கித் தேஜோ மயமாக அமர்ந்திருந்தார் அவர். கிழக்கே உதித்துக் கொண்டிருந்த இளஞ்சூரியனின் வரவு படித்துறையில் வீற்றிருந்த இந்த மூத்த ஞான சூரியனைக் காண வந்தது போலிருந்தது. அவர் பாதங்களின் அருகே பழத் தாம்பாளத்தை வைத்துவிட்டுக் கீழே சற்று அகலமாக இருந்த மற்றொரு படியின் அசௌகரியமான குறுகிய இடத்துக்குள்ளேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள் ரவியும், கமலியும்.
மலர்ந்த முகத்தோடு, ஆசி கூறுகிற பாவனையில் அவரது வலது கரம் உயர்ந்து தணிந்ததை அவர்கள் காண முடிந்தது. வெளிநாடுகளில் சுற்றிய பழக்கத்தாலும் அந்த மகானுக்குத் தான் யாரென்று நினைவிருக்குமோ, இராதோ என்ற தயக்கத்தாலும் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், "சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் ஜ்யேஷ்ட குமாரன்..." என்று தொடங்கிய அவனைப் புன்முறுவலுடன் "போதும், தெரிகிறது" - என்கிற பாவனையில் கையமர்த்திவிட்டு உட்காரும்படி இருவருக்குமே ஜாடை காட்டினார் அவர். கமலி நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவரோ அதே மலர்ந்த முகத்தோடு 'சரி தொடங்கு' - என்பது போலக் கையை அசைத்தார். தயக்கங்கள் இல்லாமல் தடைகள் இல்லாமல் சொல்லி வைத்தது போல் எல்லாம் நடந்தது.
"ஏதோ எனக்கு இருக்கும் குறைந்த ஞானத்தைக் கொண்டு கனகதாரா ஸ்தோத்திரம், ஸௌந்தர்யலஹரி இரண்டையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறேன் பெரியவர்கள் கேட்டருள வேண்டும்!" - கமலி வேண்டினாள்.
புன்முறுவலோடு அவளை நோக்கி அவர் கையை அசைத்தார். ஒளி நிறைந்த அந்த விழிகளில்