அவர்களை ஒவ்வொருவராகப் பிரியத்தோடு பேர் சொல்லி அழைத்து விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அருகே போடப்பட்டிருந்த பெஞ்சியில் அமரச் செய்தார் வேணு மாமா. அவர் கேட்க வேண்டுமென்றே அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்களாகவே கமலியைச் சுட்டிக்காட்டி, "சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருக்கா! சித்தே முன்னே இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கிறதைக் கேட்டப்போ மெய் சிலிர்த்தது. சரஸ்வதி தேவியே இங்கே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. 'இவளுக்கு' எதிராக் கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களையெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி."
"அப்படி கோவில்லே இந்தக் கமலி என்னதான் பெரிய தப்புப் பண்ணிட்டா? எதுக்காக யார் வந்து உங்களை இப்போ நிர்ப்பந்தப்படுத்தறா?..."
"தப்பாவது ஒண்ணாவது? அப்படிச் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும். அதைப் போல அபசாரம் வேற இருக்க முடியாது. நிஜத்த அப்படியே சொல்லணுமானா ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களைவிட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்."
"இதுதான் நெஜமானா நீர் இதை அப்படியே கோர்ட்டிலே வந்து சொல்ல வேண்டியதுதானே?"
"கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில்லே எக்ஸிக்யூடிவ் ஆபீசர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்கறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணணும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பா புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப் படுத்தறா! வேற வழியே இல்லை."
-இப்படி வருத்தப்பட்ட மூத்தவரான அந்த ஓர் அர்ச்சகரைத் தவிர உடன் வந்திருந்த மற்ற இரு அர்ச்சகர்களிடமும் சில கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வைத்தார் வேணு மாமா. அப்புறம் பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றினார்.